பக்கம்:கட்டுரைக் கதம்பம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்த அளவில் கூறியும் அமைந்திலர் புலவர். தமக்கு இப்பொழுது பேகன்பால் பரிசில் பெற வேண்டும் என்பது எண்ணம் இல்லை. எப்படியேனும் இவனைக் கண்ணகிபால் சேர்க்கவேண்டும் என்பதே எண்ணமாகும். அதனை வெளிப்படுத்தியும் கூறிவிட்டனர். பேகனுக்கு எம்முறையில் கூறினால் அவன் திருத்தமுறுவான் என்று சிந்தித்தனர். அதன் பொருட்டு இவன் செய்த கொடை யைக் கூறி விளித் தனர். "மெல்லிய தோகையினையுடைய கரிய மயில், குளிரால் நடுங்கு மென அருள்கூர்ந்து படாம் கொடுத்த பேகனே!" என்று விளித்தனர். இங்ஙனம் சுட்டியதன் நோக்கம், ஓர் உயர்திணைப் பொருள் - அதிலும் நின் வாழ்கைக்கு அரும் பெருந்துணையாக அமைந்த ஒருத்தி-நின்னைக் காணாது, கூடி மகிழாது, அலமந்து ஆழ்துயரில் உள்ளாள் என்பதைச் சிறிதும் உணராது. இருத்தல் முறையாமோ? என்பதை உணருமாறு செய்தற்கே இங்ஙனம் விளித்தனர். "நீ நின் இல்லக்கிழத்திக்கு இரக்கங் காட்டிலை எனில், நின் இசைக்கு வசையே வரும். ஆகவே, நின் இசையினை இழக்காமல் இருக்க விழைந்தால் அவட்கு அருள் பண்ணுக!" என்பதற்காகவே இவனுக்கு இவன் பெற்ற இசையினை நினைவுபடுத்த "நல் இசைக் கடாஅ யானைக் கலிமான் பேக!" எனவும் விளித்தனர். விளித்து யாது கூறினர்? "பேக! யான் பசித்து வந்திலன், எனக்கும் என்னை எதிர்நோக்கி வாழும் சுற்றமும் இல்லை. ஆகவே, நீ எற்கு இதுபோது பரிசில் தருக என நின்னை வினவவும் மாட்டேன். என்றாலும், ஒன்றை மட்டும் நின்னை இதுபோது கேட்க அவாவி வந்தனன். அது தான், நீ இன்றைப் பொழுதே நின் அருமனை புகுந்து. ஆயிழை, கண்ணகியின் அருந்துயர் களைதலேயாகும்" என்று வேண்டி இரந்து நின்றார்.