பக்கம்:கதாநாயகி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 127


"நான் இங்கே வர்றது இதுவே முதல் தடவை. முந்தி ஒரு தரம் இங்கே என்னை வரச் சொல்லி அழைச்சாங்க ஊர்வசி, எனக்கு ஒழியலே. ஊர்வசிக்கு என் பேரிலே எப்பவும் ஒரு அன்பு. அது பேரிலே எனக்கும் எப்போதுமே அன்பு உண்டு!" என்று விளக்கினான் பூமிநாதன். காற்றை வேண்டித் தன்னுடைய சில்க் சட்டைப் பொத்தான்களைக் கழற்றி, சட்டையைத் தளர்த்தி விட்டபோது, அவனுடைய மார்பில் தெரிந்த அந்த ரத்தத் தழும்பு இப்போதும் அம்பலத்தரசனைத் தூண்டிலாக இழுத்தது.

அம்பலத்தரசன் தன் நண்பனை ஏறிட்டுப் பார்த்தான். "பூமிநாதன், இதென்ன உங்க செஸ்ட்டிலே இவ்வளவு பெரிய காயம்?" என்று கொஞ்சம் ஆர்வத்தோடு கேட்டு வைத்தான்.

இக்கேள்வியைக் கேட்டதும், அதாவது, காது சாய்த்துக் கேட்டதும், பூமிநாதனின் முகம் சலனம் அடைந்தது. சலனம் ஒரு மாத்திரைப் பொழுதுக்குத்தான் இருந்தது. பிறகு சமாளித்துக் கொண்டான். தன்னைத்தானே ஒரு முறை குனிந்து பார்த்தவனாக, "இதுதானே? சொல்கிறேன்... அது ஒரு சோகக்கதை" என்று துயரச்சரட்டை மறைத்துக்கொண்டு சரளமாகச் சொல்லிக் கொண்டிருக்கையில், மீனாட்சி அம்மாள் இலைகள் சகிதம் கூடத்துக்கு வந்தாள். "வாங்க!" என்று பொதுப்படையான வரவேற்பை வீசினாள் முதியவள். அவளைத் தொட்டுக் கொண்டு ஊர்வசியும் வந்து நின்றாள்.

"இவர்தான் வில்லன் பூமிநாதன், என்கூட ட்ராமாவிலே நடிச்சவர்!" என்று பூமிநாதனைக் குறிப்பிட்டுச் சுட்டித் தன் தாய்க்கு அறிமுகப்படுத்தினாள் ஊர்வசி. அவள் சுவரைப் பார்த்தபோது, வழக்கம்போல அபயக்கரம் காட்டி அருள் நகை சொடுக்கிக் கொண்டிருந்த வல்லவேல் முருகனைத் தரிசித்தாள்.

"அப்படியா? ரொம்ப நல்ல பிள்ளையாகப் பதவிசாக இருக்காரே!" என்றாள் மீனாட்சி அம்மாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/137&oldid=1332989" இலிருந்து மீள்விக்கப்பட்டது