22❖ கதாநாயகி
‘காதலே, வா’ விலே இப்படித்தான் ஒரு கட்டம் உருவாச்சு. எழுத்தாளர் ஒருவர் தன்னோட புரட்சிக் கருத்துக்களாலே பிரபலமானவர், எனக்கு அதாவது நாடகத்திலே வழுக்கி விழுந்தவளாக வந்த எனக்கு அன்பு தந்து, நிழல் தந்து என்னைத் தன்னோட இனிய பாதியாகவும் ஆக்கிக்கிட்டார். இந்த ஒரு நல்ல முடிவை வரவேற்பதாகவும், இம்மாதிரியான சூழ்நிலை பிரத்யட்ச வாழ்க்கையிலே உருவாகும் போது, நெஞ்சுள்ளவங்க தங்கள் தங்கள் கடமையைச் செய்து காட்ட முன் வரவேணுமென்றும் அந்த நாடகத்துக்குத் தலைமை தாங்கிய நீங்க சொன்னிங்க. அந்த ஒரு பேச்சுத்தான் இப்போது என்னை உங்க நிழலுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்குது!.....
யாரோ எழுதிக் கொடுத்த வசனங்களை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது போல, அவள் பேசினாள்; உணர்ச்சி வசப்பட்டுப் பேசினாள். அவளுக்கு யார் எழுதிக் கொடுப்பார்கள்? அவளது நெஞ்சுரம் எழுதிக் கொடுத்த வசனங்களை அவனிடம் அவள் ஒப்புவித்தாள். அல்ல, ஒப்படைத்தாள் அவ்வளவு தான்!
சிலையாக மலைத்துப் போயிருந்தான் அம்பலத்தரசன். அவன் கண்களில் தீவிரமான சிந்தனை இருந்தது. நெற்றியில் பச்சை நரம்புகள் புடைத்திருந்தன. ஜிப்பாவைக் கழற்றி வீசினான். மேஜை மீதிருந்த சாம்பல் படிகத்தில் எரிந்து கொண்டிருந்த சிகரெட்டை மறந்து விட்டான். புதிய சிகரெட் ஒன்றைக் கொளுத்தினான். புகையும் புகைச்சல் இருமலும் ஒன்றாக வெளிப்படலாயின. வலது கை விரல்களும் ஆபத்துக்கு ஒத்தாசை செய்யத் தவறிவிடவில்லை!
ஊர்வசி இருக்கையை விட்டு எழுந்தாள். சேலையைச் சீர் செய்துகொண்டாள். கழுத்தில் விளையாடிய தங்கச் சங்கிலியோடு ஒளிப் புள்ளிகள் விளையாடின. அவனை அண்டினாள். அமிர்தாஞ்சனத்தை வலதுகைப் பெருவிரல்