பக்கம்:கதாநாயகி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52*கதாநாயகி


ஒரு பெண் துணிந்தாள். அத்துணிவில்தான் என்னை நாடி வந்தாள் ஊர்வசி. கெடுக்கப்பட்ட நிலையில்தான் வந்தாள். இருந்தால் என்ன? ஆனாலும், என்னை நம்பினாள். தனக்கு ஒரு புகல் கிட்டு மென்று தவம் இருந்தவள் போல என்னைத் தேடி வந்தாள் அவள். அவள் முடிவு விதியின் கையிலோ, அல்லது அவளைப் படைத்த ஆண்டவன் கையிலோ இல்லை, நேற்று இரவு வரை! என் கையில்தான் அவள் விதியும் அவள் வினையும் இருந்தன. கெட்டவனுக்குக் கெட்டவள்தான் சதம் என்னும் முடிவாக, இந்நிலையை நான் ஏன் கருதவேண்டும், ஆதரவற்ற நிலையில் அபலையாக வந்தாள் அவள்; உயிருக்குயிராகக் கட்டிக்காத்த கற்பைப் பறிகொடுத்த பறிதவிப்புடன் வந்தாள். சாகத்தெரிந்தவள் அவள். ஆனாலும், சாவை விரும்பவில்லை. வாழ்வை விரும்பினாள். அதன் காரணமாக, அவள் என்னை நம்பினாள்; அடைக்கலமானாள்.'

அவள் நடித்த முதல் நாடகத்திலே 'வழுக்கிவிழுந்த' அவளை ஏற்றுக்கொண்ட ஒர் எழுத்தாளரின் அந்தத் தர்மத்தை சிலாகித்துப் பேசிய என் தலைமைப் பேச்சை நம்பியே வந்தாள் என்னிடம். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டேன். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொடுத்துவிட்டேன்!... பிறவியின் கடமையை உணர்ந்தாள் ஊர்வசி. எனக்கும் பிறவியின் கடன் புரியும்! அம்மா இம் முடிவை வாழ்த்துவார்கள்! அபலைகளுக்கு ஆதரவளிக்கும் லட்சிய நோக்கம் கொண்டவர்கள் அம்மா. ஆவணியில் முகூர்த்தம் வைப்பதற்கென்று தனக்குப் பிடித்த மருமகளையும் நிர்ணயம் செய்து இருக்கிறார்கள் அம்மா. அந்தப் பெண்ணின் படத்தையும் எனக்கு அனுப்பியிருக்கிறார்கள். அநேகமாக, கூடிய விரைவில் புறப்பட்டு வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லைதான், வந்ததும், எனக்குப் பிடித்த மருமகளை அவர்களுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கதாநாயகி.pdf/62&oldid=1319015" இலிருந்து மீள்விக்கப்பட்டது