அறமும் இன்பமும் துணையாகிய மகளிரிடத்தில் நான் நன்மை பெறாமல் தீமை பெறுகின்றேனே! இது நியாயமா?' என்ற குறிப்பும் இந்தப் பாட்டில் தோன்றுகிறது. வேலவன் இங்கே முருகனை, 'செவ்வேலவனே' என்று விளிக்கிறார். இறைவனுடைய திருக்கரத்தில் இருக்கிறது ஞானம் ஆகிய வேல். அஞ்ஞானம் ஆகிய அறியாமையினால் மகளிரிடத்தில் மால் கொண்டு துன்பப்படுகின்ற நமக்கு வேலைத் தன் திருக் கரத்தில் கொண்டு நிற்கின்ற முருகன் ஞானத்தை அருள்வான். அவன் நஞ்சுக்குப் பயப்படாத நாயகனுடைய மருமகன். ஆதலால் அவனைச் சார்ந்தவர்களுக்கு நஞ்சு போன்ற மாயையின் துன்பம் இராது. அறியாமை அகலும். இந்த நினைவை எல்லாம் எண்ணியே இந்த அருமையான பாட்டை அருணை முனிவர் பாடியிருக்கிறார். ★ பாலே அனைய மொழியார் தம் இன்பத்தைப் பற்றிஎன்றும் மாலேகொண்டு உய்யும் வகைஅறி யேன்,மலர்த் தாள்தருவாய்; காலே மிகஉண்டு காலே இலாத கணபணத்தின் மேலே துயில்கொள்ளும் மாலோன் மருக!செவ் வேலவனே! (பால் போன்ற இனிய மொழியையுடைய மகளிரின் இன்பத்தைக் கைப்பற்றி எப்போதும் காம மயக்கத்தைக் கொண்டு, உய்யும் முறையை அறியாமல் இருக்கிறேன்; தாமரை மலரைப் போன்ற திருவடியைத் தருவாயாக; காற்றை மிக உண்டு கால்களே இல்லாத கூட்டமான படங்களையுடைய பாம்பின் மேலே கண் வளரும் திருமாலின் மருகனே! செம்மையான வேலை உடையவனே மால் - காம மயக்கம். கால் - காற்று, பாதம். கணம் - கூட்டம். பணம் - படம்.) 175
பக்கம்:கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள்-3.pdf/184
Appearance