பக்கம்:கனிச்சாறு 1.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  113


83  உற்றதமிழ்த் தாய்நாட்டை மீட்போம் இங்கே!

முள்மரத்தை வெட்டவெட்ட தழைப்ப தைப்போல்-
முரடர்களின் இந்திமொழி மேலும் மேலும்
உள்நுழைந்து நடுக்கூடம், சரக்குக் கூடம்,
ஓய்வறை, உள் ளறை,சமையல் அறைக்குள் எல்லாம்
கள்ளநகை இதழ்விரித்து நடைந டந்து
காலூன்றி மெல்லமர்ந்து படுக்கை சாய்ந்து,
உள்ளமனை விலைபேசும் உலுத்தனைப் போல்
உரிமையினைப் பறிபோக்கும் நிலைகண் டீரோ?

கண்டுங்கா ணாததுபோல் கவலை யின்றிக்
கட்சிக்குள், இனத்துக்குள் குத்து வெட்டுச்
சண்டைகளும், மடிவிரித்துப் பொறுக்கித் தின்னும்
சரடுவிடும் பேச்சுகளும் குறைய வில்லை!
துண்டுடுத்துத் தோள்நிறைக்கும் மாலை போட்டுத்
தோழருடன் ஊர்தோறும் உலாப்போ கின்றோம்!
மண்டையடி அடிக்கின்றான் வடவன், இங்கே!
மானத்தை விலைபோக்கி வாழ்கின்றோம், நாம்!

மாநாடு, தீர்மானம் வழக்கம் போல!
மாளாத கிளிபேச்சு! மக்கள் எல்லாம்
பூநாடும் தேனீப்போல் கூடும் கூட்டம்!
புல்லரித்துப் போகின்றோம்! அடடா! வெட்கம்!
நாநாடும் அடுக்குமொழி அழகுக் கிந்தி
நடுநடுங்கி யா,போகும்? எழடா, தம்பி!
ஓநாய்கள் கூட்டத்தை ஒடுக்க வேண்டும்;
உற்றதமிழ்த் தாய்நாட்டை மீட்போம் இங்கே!

-1985
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_1.pdf/140&oldid=1513119" இலிருந்து மீள்விக்கப்பட்டது