பக்கம்:கனிச்சாறு 2.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  95


56  இறுதிப் போர்!

ஆடினை ஆயிரம்! பாடினை ஆயிரம்!
ஆர்ப்புற யாத்தனை விடுதலைப் பாயிரம்!
அசைத்ததா பகைவரை உன்றனின் வாயுரம்?
தமிழா! அட, தமிழா - நீ
அழன்றெழு! அரிமா நடையிடு! வினைமுடி!
அதுதான் செந்தமிழ்த் தாயுரம்!

வீசினை கைகளை; விளைத்தனை சொற்களை;
விலக்கினை யா,குல மதமெனும் புற்களை?
விளைத்திட டா,தனித் தமிழெனும் நெற்களை!
தமிழா! அட, தமிழா நீ
விரைந்தெழு! வரிப்புலி நடையிடு; துணிவொடு!
வீழ்த்திடு வாய், பகைப் பற்களை!

உன்னுடன் பிறந்தவன் உனையெதிர்க கின்றான்;
உன்பகைக் கே,செருப் பாய் உழைக் கின்றான்;
உங்களை இரண்டாக்கி ஆரியன் வென்றான்!
தமிழா, அட, தமிழா - நீ
உடன்விழி! களிறென நடையிடு; முனைவொடு!
உயிர்ப்பிலா விடில், அவன் கொன்றான்!

ஆரியப் பார்ப்பனன் திருந்தினான் என்றே
ஆருனக் குரைத்தனர்? அவன்குணம் ஒன்றே!
அவனுடற் பூணூலும் உரைதரும் நன்றே!
தமிழா, அட,தமிழா - நீ
ஆர்த்தெழு! ஏறென நடையிடு! வலிவொடு
அகப்பகை விலக்குக இன்றே!

எத்தனை ஆண்டுகள் புரிந்தனை போரே!
இற்றதா ஆரியப் பார்ப்பனர் வேரே!
இன்னுமுன் கட்டாரிக் குண்டடா கூரே!
தமிழா! அட, தமிழா - நீ
இணைந்தெழு, இடியென முழுங்கிடு! நூறிடு!
இலையெனில் தொலைந்ததுன் பேரே!

-1969
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/131&oldid=1424684" இலிருந்து மீள்விக்கப்பட்டது