பக்கம்:கனிச்சாறு 2.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி


நீயோர் அடிமை என்பதை நினையாய்!
பாயோ தரையோ படுத்துத் தூங்குவாய்!
படைத்ததை உண்ணப் பழகிக் கொண்டனை!
கிடைத்ததில் உள்ளக் கிறக்கம் கண்டனை!

உரிமை வேண்டிக் கேளடா என்றால்
உரிமைக்குப் பொருளென்ன என்று கேட்கிறாய்!
உரிமைக்குப் பொருளே உரிமை என்பதை
நரியும் நாயும் நன்றாய் உணருமே! 40
கட்டிய நாய்க்குக் கழுத்து முட்டக்
கொட்டி வளர்க்கினும் குரைத்துக் குரைத்துக்
தன்னுரி மையினைத் தவறாது முழக்குமே!
உன்னுரி மைக்கோ உளவு கேட்கிறாய்?
உலக இனத்துள் உன்னினம் ஒன்றுதான்
பலநெடுங் காலமாய் அடிமைப் பட்டது!
குடிமை தளர்ந்தது; பண்பு குலைந்தது;
மிடிமை சான்றது; மேல்வர மறந்தது!

தமிழனே இதுகேள்! உன்னினம் தாயினம்!
அமிழ்தெனும் உன்மொழி அனைத்தினும் தாய்மொழி 50
உன்நா கரிகம், உன்பண் பாடே
எந்நா கரிகத் தினுஞ்சிறந் திருந்தது!
உன்றன் பண்போ ஒருதனிப் பண்பாம்!
உன்றன் அறமும் அரசியல் அமைப்பும்
என்றும் பொருந்திப் பொதுமை இயல்வது;
ஒன்றும் பொதுமை புதிய தில்லையே!
காரல் மார்க்சு கண்ட பொதுமையைப்
பாருக் குரைத்தது பழம்பெருந் தமிழே!
இந்தப் பொதுநிலை கழக நூல் உரைக்கும்!
அந்த வரலாறு அடியொடு மாறியே 60
இன்றைய அடிமை இனவர லாறாய்க்
குன்றிக் குலைந்து கொடுமைப் பட்டதே!

உரைக்கக் கேளிதை; உன்னினம் இன்றோ
அரைக்காணி நிலத்தையே அளப்பருஞ் சொத்தாய்க்
கருதிக் கொண்டு கவலாது கிடக்கும்!
பெருநிலம் உனக்குச் சொந்தம் என்பதோ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/156&oldid=1424778" இலிருந்து மீள்விக்கப்பட்டது