பக்கம்:கனிச்சாறு 2.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  129

வெறுக்கும் படியொரு புன்மை விளையினும்,
வீணர் பலரிகழ்ந் தலர்மொழி யுரைக்கினும்,
மறுக்கும் படியிலாக் குறைசில நேரினும்,
மாற்றவர் அவற்றையே மனஞ்சுடச் சுட்டினும்,
பொறுக்கும் நிலைக்கெலாம் இனநலம் பெரிதெனப்
பொறைதமிழ் நல்லினம் நினைந்திடல் வேண்டும்;
குறுக்கில் நுழைதலும் குப்புறக் கவிழ்த்தலும்
குலைத்திடும் குலைத்திடும் இனத்தினை, ஆதலால்!

தப்பித் தவறியோர் தலைவனிங் கெழுந்து முன்
தடங்கெட நடக்குநந் தமிழரைக் கூட்டியே
வெப்பினும் மழையினும் நமக்கென நடக்கையில்
வெறுக்கலி லாமன வேட்கையில் பிழைசில
திப்பியைப் போலவே தெரியினும் தேன்பெறுந்
தேவையால் இனநலங் காத்திடல் வேண்டும்;
துப்பலும் தூறலும் அடியறத் துணித்தலும்
தொலைத்திடும் தொலைத்திடும் இனத்தினை, ஆதலால்!

முத்தினை எடுக்கையில் சிப்பியைத் தவிர்த்தல்போல்,
மொந்தையை வடித்ததன் கள்ளினை யருந்தல்போல்,
மத்துநெய் வழிக்கையில் மறந்து விடுத்தல்போல்,
மண்டிள நீரினில் மட்டையை நீக்கல்போல்,
ஒத்துளங் கொண்டிடும் நிலைகளில் இனநலம்
உயர்வெனத் தமிழினம் நினைந்திடல் வேண்டும்;
குத்தலும் குடைதலும் குறும்புசேர் உரைகளும்
கொன்றிடும் கொன்றிடும் இனத்தினை, ஆதலால்!

நூறுநூ றாண்டுகள் நொடிந்திடு மோரினம்
நொண்டியின் நடைநடந் திளநடை பயில்கையில்
ஏறென முன் நடப் போன்மன ஏழ்மையால்
ஏஎதோ ஓரிரு பிழைசெயல் உண்மையால்
வேறெனக் கருதிடா தின நலம் பெரிதென
விறல் தமிழ் மறலினம் நினைந்திடல் வேண்டும்;
காறலும் கனைத்தலும் கயமைகள் விளைத்தலும்
கவிழ்த்திடும் கவிழ்த்திடும் இனத்தினை, ஆதலால்!

-1973
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/165&oldid=1416756" இலிருந்து மீள்விக்கப்பட்டது