பக்கம்:கனிச்சாறு 2.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  191


124

பெரியாரையும் பாவேந்தரையும்
பட்டிமன்றத்திற்கும் - பாட்டரங்கத்திற்கும் மட்டுந்தான்
பயன்படுத்திக் கொள்ள வேண்டுமா?


உரிமைக் கிளர்ச்சியால் ஒன்றுபட் டார்ந்தே
அரிமா முழக்கோடு ‘அசாமியர்’ எழுந்தனர்!

குருதி யாறு கொப்புளித் தோடினும்
இறுதி உரிமைக்கு இராப்பகல் போராடி
விடுதலை மூச்சுக்கு விடிவு தேடினர்!

அடுதலைப் போருக்கு அங்கொரு ‘பெரியார்’
பிறந்திட வில்லை; பேசிட வில்லை!
இருந்தும் ஆங்கோர் இனப்போர் எழுந்தது!

பாவேந்தர் போலொரு புரட்சிப் பாவலன்
நாவேந்து பாக்களால் நாட்டாமற் போயினும்
‘பஞ்சா பியர்’கள் பச்சைக் குருதியால்
எஞ்சா மறத்தோடு இனநலம் முழக்கினர்!
உணர்வால் பாவேந்தர் பஞ்சாபியர் உளத்தில்
புணர்ந்து செயல்படும் புரட்சியைக் கண்டோம்!

பெரியார் என்னும் பெற்றிடாப் பேற்றை
உரிய காலத்தில் உவந்துபெற் றிடினும்,
அவரின் உழைப்பை அலித்தமி ழினமோ
கவன மின்மையால் கைநெகிழ்த்து விட்டது!

அதுபோல்,
பாவேந்தர் தமிழர்க்குப் பயன்படும் வகையையும்
ஈவால் அவர்தந்த இனநல உணர்வையும்
எண்ணிப் பார்க்கிறோம்! இழிவு! மிக இழிவு!
பண்ணிப் பண்ணிப் பாவேந்தர் பாடலை
மேடை தோறும் மிடுக்குடன் முழக்கிக்
கூடை கூடையாய்க் கொட்டி அளக்கிறோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/227&oldid=1437426" இலிருந்து மீள்விக்கப்பட்டது