பக்கம்:கனிச்சாறு 2.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  211


140

ஊக்கம் இழக்க வேண்டாம்!


ஊக்க மிழக்க வேண்டாம்! - உள்ள
உறுதி குலைய வேண்டாம்!
ஆக்கம் வந்து சேரும்; - நம்
அனைத்துத் துயரும் தீரும்!

உண்மை உணர்ந்த தொண்டர் - உடன்
உழைக்க வருதல் வேண்டும்!
திண்மை யுள்ள பேர்கள் - ஒன்று
திரண்டு கூடல் வேண்டும்!

பத்துப் பேர்கள் ஊர்க்கு - ஒரு
பண்ணை உழவு போல
ஒத்து ழைக்க வந்தால் - விரைந்(து)
ஊரைத் திரட்ட முடியும்!

சந்தை கூடும் நாளில் - நாற்
சாலை கூடும் இடத்தில்
மந்தை மந்தை யாக - ஊர்
மக்கள் திரளும் போதில்,

கருத்தை விளக்கிப் பேசி - நல்ல
காட்சி அமைத்து நடித்துத்
திருத்தும் முயற்சி செய்தால் - மக்கள்
தீமை உணர்ந்து கொள்வார்!

உழைப்பு மிகவும் வேண்டும்! - நம்மை
ஊர்ம திக்க வேண்டும்!
பிழைப்ப தற்குத் தொண்டை - ஒரு
பேறென் றெண்ண லாமோ?

மக்கட் கிழிவு செய்தார் - இம்
மண்ணை ஆள வந்தார்!
ஒக்க அவரை வீழ்த்தி - நலம்
ஊருக் காக்க வந்தோம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/247&oldid=1437449" இலிருந்து மீள்விக்கப்பட்டது