பக்கம்:கனிச்சாறு 2.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  225


154

விளைவு எங்கே? வீரம் எங்கே?


-திரைப்படமும் அரசியலும் மக்களிரு
தினவுகளாய்த் திரட்சி பெற்றே
இரைப்பைக்கும் நெஞ்சுக்கும் ஏற்ற இரு
உணவுகளாய் எந்நே ரத்தும்,
உரைப்பதுவும் எழுதுவதும் உணருவதும்
அவ்வுணர்வாய் உழன்று ழன்றே,
வரைப்பின்றி மதிமயங்கும் மக்களிடைத்
தமிழுணர்வு வளர்ப்ப தெங்கே?

அடிமையராய் அறியாமை மிக்கவராய்
அழிவுமத, சாதிச் சேற்றில்
மிடிமையராய் உள்ளழுந்தி மூழ்குகின்ற
மக்களினை மீட்ப தெங்கே?
குடிமைநலம் பேசியராய் அன்னவரைக்
கொள்ளையிட்டுச் சுரண்டி வாழும்
கொடியவராம் அரசியல்செய் கூத்தாட்டக்
கயவர்களும் குறைவ தெங்கே?

மன நலத்தைச் சிதைக்கின்ற மதிநலத்தைக்
குறைக்கின்ற மலிவுப் பேச்சு!
இனநலத்தை வளர்க்காத, நாட்டுநலம்
பேணாத இழிசெ யல்கள்!
புனைநலத்தை உண்மையென்று, புளுகுரையை
மெய்யென்று, புகழுக் காக
வினைநலத்தைக் கெடுக்கின்ற வீணர்களுக்
கிடையில் இனம் விடிவ தெங்கே?

கிளர்ந்துவரும் கழிகாமத் திரைப்படத்தில்
கலைகளெனும் கயமைச் சேற்றில்
வளர்ந்துவரும் இளைஞரெலாம் மதிமயங்கி,
மனம்கெட்டு, மானம் இன்றித்
தளர்ந்துவரும் தன்மானம் அறக்கழிய
உடல் கெட்டுத் தாழ்ச்சி யுற்றார்!
விளர்ந்துவர வேண்டியநல் உணர்வெல்லாம்
விட்டவர்கள் விழிப்ப தெங்கே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/261&oldid=1437471" இலிருந்து மீள்விக்கப்பட்டது