பக்கம்:கனிச்சாறு 2.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  31


21  நினைவுத் துயர்!

பழியகல் உளநலம் துயரறு உரைவளம்
பயன்மிகு நறுவினைப் பாடிலர்;
வழியறி கிலர்வரு மிழிவுணர் கிலர்;பல
வனப்பினர்; கனப்பினர்; பீடிலர்;
மொழியுணர் விலர்;கலை விழிப்பிலர்; இருள்வழி
முடிக்கிடும் நடையினர்; வீடிலர்;
கழிமிகு களியினர்; நிலைநினைந் துருகியே
கசிந்துளம் குலைந்துடல் வாடுவேன்! 1

தொழிலுயர் வறிகிலர்; தொலைப்புகழ்ப் புரந்திலர்;
துகளறு உறவிலர்; வீம்பினர்;
எழிலறிந் துயர்கிலர்; இனநலம் புரிகிலர்;
இடலிலர்; படுகிடைச் சோம்பினர்;
இழிவறு மிலக்கிலர்; குறிப்பிலர்; உறுப்பிலா
இனத்தினுங் குறைபடச் சாம்பினர்;
கழிகடைப் புனலினுங் கொடியவர்; நினைந்துளம்
கழன்றுடல் குலைந்துயிர் தேம்புவேன். 2

அணிபெற முழக்குவர்; அவைவழி நடக்கிலர்;
அறிவினர் துயர்நிலைக் கொதுங்குவர்;
திணிவுறுங் கருத்திலர்; தெளிவுறு மறிவிலர்;
திகைவற மொழிகிலர்; பதுங்குவர்;
பணிவுறு மகளிரைப் பழிசெயத் தயங்கிலர்;
பணிக்கொளிந் திருவிழி பிதுங்குவர்;
துணிவுற வெழுதிலர்; பணங்கொளுங் குறியினர்;
துடிப்புற அவர்க்குளம் வெதும்புவேன்! 3

பொலிவுடல்; ஒளியிடை; நறுவிரை; நெளிகுழல்;
புனை பொடி யடிக்கடி பூசுவர்;
வலிவிலர்; உளமிசை வனைவிலர்; நினைந்திலர்;
வகைவகை உணவுண மூசுவர்;
நலிவுறுங் குடும்பினர்; நரம்புறு மகவினர்;
நறுந்தமிழ் மறந்தயல் பேசுவர்;
ஒலிமிகு நகரினர்; அமைதியின் புணர்கிலர்க்
குலைந்துலைந் துளமுயிர் கூசுவேன்! 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/67&oldid=1424687" இலிருந்து மீள்விக்கப்பட்டது