பக்கம்:கனிச்சாறு 2.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36  கனிச்சாறு - இரண்டாம் தொகுதி

நைகின்ற தமிழ்நெஞ்சே! நலிவகற்று;
நலஞ்சேர்க்கும் நடையு ரைப்பேன்;
மெய்குன்ற, நலங்குன்ற, மேலோர்க்குக்
கீழோர்செய் மிடிமை முற்றும்
பொய்குன்றக் குன்றுமெனப் புகட்டி, அவர்
புன்செயலின் புரையை நீக்கி,
உய்கின்ற திறங்கூறி உணர்ந்தொழுங்கில்
உயர்வுறவே உரைசெய் வாயே! 5

வாடுகின்ற தமிழ்நெஞ்சே வனைந்தெழு, நீ;
வாட்டமிலா வகையு ரைப்பேன்!
கூடுகின்ற மாந்தரெல்லாம் உன்னினத்தார்;
அன்னவரின் கூட்டுக் குள்ளே
ஓடுகின்ற குருதிதமிழ்; உணர்வுதமிழ்;
உயிரெல்லாந் தமிழ்;என் றாலும்
ஆடுகின்ற நாகரிக நிழலாட்டம்
அயலாமென் றறிவிப் பாயே! 6

நொடிகின்ற தமிழ்நெஞ்சே! உயர்ந்தெழு நீ!
நோவகற்றும் உளவு சொல்வேன்;
வடிகின்ற தமிழுணர்வில் உயர்வுளத்தைக்
குளிப்பாட்டி வனைவு செய்து,
படிகின்ற இலக்கியநீர் பருகிவரப்
பைந்தமிழ் நாட் டிருள் மறைந்து
விடிகின்ற ஒளிக்கதிரை விழிகுளிரக்
காண்பமெனவிளம்பு வாயே! 7

துடிக்கின்ற தமிழ்நெஞ்சே! துள்ளுக,நீ!
துன்பமில்லாத் தோது சொல்வேன்:
அடிக்கின்ற புயற்காற்றும் தமிழானால்
அதையேற்போம்! அயரா மின்னி
இடிக்கின்ற வல்லிடியும் தமிழானால்
இனியதென ஏந்தும் நெஞ்சு!
குடிக்கின்ற கூழெல்லாம் தமிழாயின்
அமிழ்தென்று கூவு வாயே! 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_2.pdf/72&oldid=1424725" இலிருந்து மீள்விக்கப்பட்டது