பக்கம்:கனிச்சாறு 3.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114  கனிச்சாறு - மூன்றாம் தொகுதி


99  பிரபாகரன் பிறந்தநாள் வாழ்த்து!

'பிரபா கரன்' எனும் பிள்ளை வேங்கை
உரமாய்த் தமிழினம் உய்ய உயிர்தந்து
திருவார் தமிழீழம் தேடப் பிறந்தான்!
பெருமானத் தமிழன்! பெறலரும் வீரன் - அவன்
உருவான நாளெண்ணி ஊதாயே சங்கம்!
ஓங்குகவன் புகழென்றே
ஒலிப்பாயே முரசம்!

இந்தியப் பெரும்படைக்கு எதிர்நின்ற வெம்புலி!
கொந்திய நெஞ்சாங் குலையினி லிருந்து, அவன்
சிந்திய அரத்தத்தால் சிவந்தது தமிழீழம்!
பிந்திய தமிழ்மறம் பேணிப் புரந்தான்! - அவன்
வந்தலர்ந்த நாள் மகிழ்ந்து பாடுகவே வாழ்த்தும்!
வளர்கஅவன் புகழென்றே
மீட்டுகவே யாழும்!

மறந்த தமிழினத்தின் மறஞ்சொன்ன வேந்தன்!
இறந்த இனப்புகழை ஏற்றிவைத்த வீரன்!
திறந்த மார்பொடு பகையினைத் தீர்த்த
சிறந்த இராவணற்கும் சிறப்பளித்த தமிழன்! - அவன்
பிறந்தொளிர்ந்த நாள் நினைந்து பேரிகையே முழங்கு!
பெற்றான்காண் பெரும்புகழும்!
பிளிறுகவே வேழம்!

-1989
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/143&oldid=1424636" இலிருந்து மீள்விக்கப்பட்டது