பக்கம்:கனிச்சாறு 3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  11


9  இருள்மிகு நாடே.......!


அரசியல் தெளியா மாந்தரிங் கொருபால்;
அறம்பிழை வாணிகர் ஒருபால்;
வரவியல் செலவியல் அறிகிலர் ஒருபால்;
வருவதை முடக்குவர் ஒருபால்;
கரவுளம் ஒருபால்; குலவெறி வளர்க்கும்
கயவரும் களியரும் ஒருபால்;
இரவினும் திண்ணிய மடமைகொள் நாடே
எங்கொளி பெறுகுவ தினியே!

-1963



10  எத்தனை நாள் போராட்டம்?

முத்தமிழை மீட்பதுவோ பகைவர்முன்
வீழ்வதுவோ, முடிவு செய்வீர்!
கத்துவதால் குரல்வற்றி உயிர்வற்றிக்
களைத்தல்லால் பயனென் கண்டீர்?
செத்தழிவோம் என்றெண்ணி அஞ்சினிரோ?
தமிழ்மறவீர்! சீற்றம் எங்கே?
எத்தனைநாள் போராட்டம் நடப்பதிங்கே?
உயிர்குடிக்க எழுக நாடே!

-1964
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_3.pdf/40&oldid=1424535" இலிருந்து மீள்விக்கப்பட்டது