பக்கம்:கனிச்சாறு 4.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  107


75

பெண்டிர் பெருமை !


அறிவும் ஆற்றலும்
ஆண்களைப் போலவே
அனைத்துப் பெண்டிர்க்கும்
இயற்கை அளித்தது!
செறிவுற உயிர்களைப்
படைத்திடும் தாய்மையும்
சேய்களைப் புரந்திடும்
சிறப்பையும் தந்தது!

அன்னையும் அவர்தாம்!
அருந்துணை அவர்தாம்!
அறிவிலும் செயலிலும்
அமைச்சரும் அவர்தாம்!
முன்னையும் பின்னையும்
முழுவாழ் வுக்கும்
முதலும் இறுதியும்
முழுமையும் அவர்தாம்!

ஆக்கவும் அளிக்கவும்
அழிக்கவும் ஆன
அருந்திறம் மூன்றையும்
அன்னைக் குலத்திடம்
தேக்கிய இயற்கையின்
திறம்அறி யாமல்
தெய்வப் பெண்டிற்குத்
தீங்குசெய் யாதீர்!

-1986
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_4.pdf/142&oldid=1440810" இலிருந்து மீள்விக்கப்பட்டது