பக்கம்:கனிச்சாறு 5.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  111


109

உழைக்காமல் பயன் இல்லை!


பள்ளியை நோக்கி
நாளும் ஓடுவாய்!
பையினுள் சுவடிகள்
பொத்தகம் தூக்குவாய்!
அள்ளி,உண் ணாமலே
பசியும் அடங்குமா?
ஆவலாய்க் கற்காமல்
அறிவூறுமா?

உழுகின்ற நோக்கோடு
கலப்பையை ஏந்தினாய்!
உழைக்காமல் விதைக்காமல்
பயன்எதிர் பார்க்கிறாய்!
நிழலென்று சொன்னாலே
உடலும் குளிருமா?
நெருப்பென்று சொன்னாலே
குளிர் போகுமா?

உண்மையை உணராமல்
உழைப்பை இகழ்கிறாய்;
ஊமையாய் இருந்தே
துறவி என்கிறாய்!
அண்மையில் இருப்பதே
சேய்மை ஆகுமா?
ஆழப் படுத்தாமல்
நீர் ஊறுமா?

-1975
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_5.pdf/145&oldid=1444846" இலிருந்து மீள்விக்கப்பட்டது