இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
144 ☐ கனிச்சாறு – ஐந்தாம் தொகுதி
144
தமிழ்த்தாய் பெருமை!
ஆடிப் பாடுவீர் குழந்தைகளே! - நம்
அன்னை தமிழ்த்தாய் மகிழ்வுறவே!
தேடிப் பிடித்தவள் பெரும்புகழை - இத்
தேயம் உணரப் புகழ்வீரே!
பாடிக் களைத்த திருநாவும் - அவள்
பண்பில் திளைத்த வரலாறும்,
சூடிக் களித்த பெரும்புகழும் - உம்
சொத்தாய் மகிழ்ந்து போற்றுவீரே!
தன்னந் தனியாள்; மூத்துயர்ந்தாள்!, இத்
தரைநிலம் எங்கும் மொழிபயந்தாள்!
தென்னன் தடந்தோள் வளர்ந்தவளாம், இத்
திக்குகள் எட்டும் பரந்தவளாம்!
முன்னம் பெருமை தானிழந்தாள், அவள்
முகத்தில் கவலை தோய்ந்தயர்ந்தாள்!
இன்னம் அறியா திருக்கின்றோம்!, அவள்
ஏற்றம் உணர்ந்தே வாழ்த்துவிரே!
-1989