பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 43
48 எலிகள்!
குடியிருக்கும் வீட்டை, எலிகள்
குடைந்து வளையைக் கட்டுமாம்!
அடியி லிருக்கும் கல்லும் மண்ணும்
அள்ளி மேலே கொட்டுமாம்!
திருட்டுத் தனமாய் இரவில் வந்து
தின்பண் டத்தை உருட்டுமாம்!
உருட்டி வைத்த அப்ப ளத்தை
உதறி மண்ணில் புரட்டுமாம்!
வெண்ணெய், பருப்பு, வெல்லம், புளியை
வேறு வேறாய் மாற்றுமாம்!
எண்ணெய்க் குப்பியை இழுத்துத் தள்ளி,
எங்கும் வழிய ஊற்றுமாம்!
சீயற் காயைக் கடித்துக் குதறிச்
சீரகத்தை இறைக்குமாம்!
காய வைத்த வற்றல், வடகக்
கணக்கைக் கொஞ்சம் குறைக்குமாம்!
தேங்காய்க் கீற்றைத் தேடிப் பிடித்துத்
தின்று துணுக்கைச் சிதறுமாம்!
பாங்காய் வைத்த புதிய துணியைப்
பார்த்துக் கடித்துக் குதறுமாம்!
சீப்பின் பல்லை வளைத்துக் கொறித்துச்
சிவப்புச் சாந்தைக் குழப்புமாம்!
பாப்பா வின்மேல் இரவில் விழுந்து
பதறி யடித்தே எழுப்புமாம்!
சவர்க்கா ரத்தைக் கடித்துத் தின்னும்!
சுவடிக் கட்டை உண்ணுமாம்!
சுவர்க்கு மேலும் கதவின் மேலும்
சுட்டி நடனம் பண்ணுமாம்!