பக்கம்:கனிச்சாறு 7.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  73


56

அனைத்தும் ஒன்றே!


புகழ்எனக்குப் பொருட்டில்லை; நோக்கமில்லை;
பெருமையில்லை; பொருளும் இல்லை!
இகழ் எனக்குத் தாக்கமில்லை; துன்பமில்லை;
இழிவில்லை; இழப்பும் இல்லை!
திகழ்தமிழின் இனம்நாட்டின் பெருமையெலாம்
தேய்ந்தழிந்த உரிமை எல்லாம்
அகழ்வெடுக்கும் முயற்சியிலே இழிவெனினும்
அழிவெனினும் அனைத்தும் ஒன்றே!

துன்பம்எனைத் தொளைப்பதில்லை; அரிப்பதில்லை;
தொய்வடையச் செய்வ தில்லை!
இன்பம்எனக் கினிப்பதில்லை; உவப்பதில்லை;
ஏக்கழுத்தும் செருக்கும் இல்லை!
அன்புறுநம் செந்தமிழ்க்கும் இனத்திற்கும்
நாட்டிற்கும் உழைக்கும் என்னைத்
தென்புறுத்தும் நல்லுணர்வில் மூழ்கிவிட்ட
திளைப்பினிலே எவையும் ஒன்றே!

சிறையெனக்குத் துன்பமில்லை; கொடுமையில்லை;
சிறிதுமெனைச் சிதைப்ப தில்லை!
நிறைபணியால் சோர்வதில்லை; சலிப்பதில்லை;
நேர்மைநிலை குறைவ தில்லை!
குறைவறுநம் தூய்தமிழ்க்கும் மக்கட்கும்
நாட்டிற்கும் தொண்டு செய்தே
மறைவுறுநம் பெருமைகளை, உரிமைகளை
மலர்த்துகையில் அனைத்தும் ஒன்றே!

-1993
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/118&oldid=1446167" இலிருந்து மீள்விக்கப்பட்டது