இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 131
95
அவனே இவன்!
அன்புத் தமிழன்; அருட்செல்வன்!
தான் வளர்ந்த
இன்பத் தமிழ்க்கே எனையீந்தேன்
என்பான் காண்!
இன்பத் தமிழ்க்கே எனையீந்தேன்
என்பானே
தென்புத் தமிழ்காக்கும் தென்மொழியைத்
தீய்த்தனனே!
மானத் தமிழன்; மறக்குலத்தோன்;
மண்ணாளுங்
கானக் குயிலாய்த் தமிழ்பாடுங்
காவலன் காண்!
கானக் குயிலாய்த் தமிழ்பாடுங்
காவலனே
மானத் தமிழ்வளர்க்கும் தென்மொழியை
மாய்த்தனனே!
கொற்றத் தமிழன், கொடும்பகையைக்
கோலோச்சால்
முற்றத் துவைக்கும் முனைவுள்ள
மொய்ம்போன் காண்!
முற்றத் துவைக்கும் முனைவுள்ள
மொய்ம்போனே
செற்றுத் தமிழ்புதுக்கும் தென்மொழியைச்
சீய்த்தனனே!
கூர்த்த மதியன்; குறைவில்லாக்
கொள்வினையன்;
கார்த்தண் முகிலாய்ச் செந்தமிழைக்
காப்போன் காண்!
கார்த்தண் முகிலாய்ச் செந்தமிழைக்
காப்போனே
போர்த்த இருள்கடியுந் தென்மொழியைப்
புய்த்தனனே!
-1975