பக்கம்:கனிச்சாறு 7.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  13

தடித்தசிலர் சிரிசிரித்துக் கூச்சல் செய்து
தறுதலைபோல் பெண்கள்பாற் றிரும்பிப்பார்த்தே
இடித்தஇடி போல்சிரிப்பார்! சிலரோ பெண்ணை
இடித்துவிட்டு ‘வண்டியின தசைவே' என்பார்!
படித்தபடி சிலபேர்கள் இருப்பார்; ஆனால்
பார்வையெலாம் நூல்நோக்கும் எண்ணம் பெண்மேல்!
மெத்ததலை யாடுதல்போல் சிலபேர் நன்றாய்க்
குறட்டைவிட்டுத் தூங்கி யசைந் தாடுவார்கள்!

வண்டி விரைந்தோட, அதனின்வாய் சங்கூத
வால்போல் வருந்தொடர்கள் தாளம்போட
எண்டிசையும் இருள்தோய்ந்த காற்றின் ஊடே
எதிரொலிக்க, மலைகடந்து, வெளிகடந்து,
மண்டியுள்ள மரக்காடு கடந்தே, ஓடை
மரப்பாலம் பலகடந்து, ஊர்கடந்து
அண்டியுள்ள நிலையங்கள் கடந்து செல்ல,
அரைத்தூக்கத் தோடேநான் அமர்ந்து சென்றேன்.

கவிந்துள்ள மையிருளும் மறைந்துசெல்லக்
கீழ்வானும் வெளுத்துவரப் பரிதிச் செல்வன்,
குவிந்துள்ள தாமரைமொக் கவிழ்தல் போலக்
கொல்லனுலைக் களத்திரும்பின் செம்மை பூசிக்
கவின்செய்தான்; வண்டியினுள் ளிருந்த வாறே,
காட்சியினைக் கண்டுணர்வால் பூரித்தேனே!
நவில்கின்ற செந்தமிழால் இனிக்கும் உள்ளம்;
நற்காட்சி தனைக்கண்டு குளிரும் கண்கள்!

‘இரவி'யெழுந் தொருமணிக்குள் வண்டி சென்று
இறக்கிற்று! நடுநிலையம்!! அடடா, அங்கு
அரவந்தான் என்ன! அங்கே ஆட்கள்கூட்டம்
அழகொழுகும் கண்காட்சி! இவைக ளூடே
வரவுக்குக் காத்திருந்தான் உறவோன்; ஓடி
வந்தெனது பெட்டியினை வாங்கிக் கொண்டு
பரவியுள்ள மக்கள்புன லூடே சென்று
பாதையினை அடைந்திட்டான்! பின்னால் சென்றேன்.

கொண்டுவரும் பெட்டியினைப் பிடுங்கிக் கொண்டு
கூலியாள் வேண்டுமா என்பார்! வந்து
வண்டியினுள் ஏறிப்பெரும் மூட்டை தூக்கி
வந்திடுவார்! ஓர்புறத்தில் தேநீர் விற்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_7.pdf/58&oldid=1441923" இலிருந்து மீள்விக்கப்பட்டது