பக்கம்:கனிச்சாறு 8.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  113


முடிவுரை:

பல்வகையாய்க் குடித்தீமை பாடிவைத்தார் முன்பு
பாவலர்கள் இன்றைக்கும் பாடிவிட்டார்; ஆனால்
வெல்வகையைக் கண்டோமா? நல்லனபெற் றோமா?
விறலழிக்கும் மதுக்குடிப்பை விட்டோமா வாழ்வில்?
தொல்பெருமை கட்டழிக்கும் கட்குடிதான் என்று
தொன்மைதிருக் குறள்சொன்ன போதும்அதைத் தள்ளி
நல்வழியைப் பின்பற்றத் தயங்குகின்றோம்; நாளும்
நலிகின்றோம்; இழிகின்றோம்; நம்பெருமை விட்டோம்!

எத்தனையோ குடிப்புவகை இந்நாட்டி லுண்டாம்!
இருமல்வரும் புகைக்குடிப்பு; குளம்பியும்தே நீரும்
பித்தனைப்போல் அலைக்கழிக்கச் செய்யும்பெருங் குடிப்பு!
பேரளவில் விற்பவைதாம் பிழிவுகள்!என் றாலும்
அத்தனைக்கும் பெருங்குடிப்பு மதுக்குடிப்பாம் என்றே
அனைவரும்நாம் அறிந்திருப்போம்; ஆனாலும் நம்மில்
எத்தனைப்பேர் அதனைப்பின் பற்றுகின்றோம் இங்கே?
இருந்தாலும் குடிக்கின்றோம்; குடிகெட்டுப் போனோம்!

பெரும்பாலும் நல்லவற்றைக் கைக்கொள்வ தில்லை;
பேசுகின்றோம்; எழுதுகின்றோம்; பின்பற்று வோமா?
இரும்பாலும் கல்லாலும் கடவுளென்று நாளும்
எதையெதையோ வணங்குகின்றோம்; நாளெல்லாம் என்ன
அரும்பாடு படுகின்றோம்; உழைக்கின்றோம், செல்வம்
ஆக்குகின்றோம், ஆனாலும் மதுக்குடிப்பால் அதனை
விரும்பாத தீயவழி வகைகளிலே தேய்த்து,
வெறும்வாழ்க்கை வாழுகின்றோம்! இதையெண்ணிப் பாரீர்!

கட்குடியைக் கடியாத மதத்தலைவர் இலரே!
கட்குடியை மறுக்காத அறநூலார் இலரே!
கட்குடியை நீக்காத கல்வியினார் இல்லை;
கட்குடியை மறுக்காத பெரியோர்கள் இல்லை;
கட்குடிதான் நிலவுகின்ற தீமைக்கெலாம் முதலாம்;
கட்குடிதான் குடிகெடுக்கும் - என்றறிவோம்; ஆனால்
கட்குடியை ஒழித்தோமா? சட்டத்தால் ஒழித்தோம்!
கள்ளவழிக் காய்ச்சுகின்றோம் குடிக்கின்றோம் நாளும்!

தீமையென்றே உணர்ந்திருந்தும் தீமைசெய் கின்றோம்;
திருட்டாகக் குடிக்கின்றோம்; குடும்பநலம் தேய்ப்போம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/127&oldid=1448471" இலிருந்து மீள்விக்கப்பட்டது