பக்கம்:கனிச்சாறு 8.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


11.பாவேந்தர் விழாப் பாட்டரங்கம்

(தி.பி. 2008 விடை 2 (15.5.77) அன்று பகுத்தறிவாளர்கள் சார்பில் வேலூர்
நகர மன்ற அரங்கில் நடைபெற்ற பாவேந்தர் பிறந்த நாள் விழாப்
பாட்டரங்கத்தின் தலைமையுரை)


முன்னுரை:

பேரன்பு மிக்கவரே! பெரியோரே! எம்மைப்
பெற்றதமிழ்த் தாய்க்குலமே! இளைஞர்களே! வணக்கம்
சேரனொடு சோழனும்நற் பாண்டியனும் சேர்த்துச்
செந்தமிழை வளர்த்தகதை பழங்கதையாய்ப் போக,
வீரமிலா தன்புமிலா தார்வமும்இல் லாது
வீண்பகட்டுக் காரர்களாய் நாம்வாழும் போதில்
‘யாரவன்காண் எந்தமிழைப் பழித்தவன்’என் றொருவன்
இடிக்குரலில் வினாவெழுப்பி எழுகளிறாய் வந்தான்!

இராவணனைச் சாய்த்தஇனம் - எந்தமிழ்மா வீரன்
இரணியனை ஒழித்தகுலம் - ஏற்றமிகு நூலால்
பராவியநம் முன்னோர்கள் வளர்த்திமைபோல் காத்த
பசுந்தமிழைத் தாழ்த்தியதோர் பழிவடவக் கூட்டம்
விராவியநம் பெருமை யெலாம் அடிவெட்டி வீழ்த்த
வீணர்குலம் - நம்நாட்டை வளைத்தழித்த பின்னைத்
திராவிடர்நம் திருநாட்டை மீட்பதற்கிங் கொருவன்
தெள்ளுதமிழ்ப் பாப்பாடி உயிர்த்தெழுந்து வந்தான்!

இன்னலிலே நாம்துயின்ற இழிவுநிலை கண்டே
‘எழுந்திடுக தமிழினமே தமிழினமே’ என்று
மின்னலிலே உயிர்கிளர்ந்து மேனியெல்லாம் பாயும்
மெட்டெடுத்தே உளம்புதுக்கும் உயிர்ப்பாட்டைப்பாடிக்
கன்னலிலே தமிழ்பிசைந்து காதினிக்கக் கூவிக்
கருத்தூட்டி உணர்வூட்டித் தமிழ்மறமும் ஊட்டித்
தென்னவரின் சூம்பிவிட்ட தோள்களிலே வீரம்
தெறித்தொளிரச் செய்யவொரு தீம்புலவன் வந்தான்!

பாழெடுத்த சொற்களிலே பைந்தமிழைக் கொல்லும்
பச்சைவெறிப் பாடல்களைப் பாடும்நரிக் கூட்டம்
காழெடுத்த ஓசையிலே காதறுந்து நின்ற
காலத்தில் - நேரத்தில் - ஈங்கொருவன் தோன்றிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/130&oldid=1448475" இலிருந்து மீள்விக்கப்பட்டது