பக்கம்:கனிச்சாறு 8.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  127


“இன்னலிலே தமிழ் நாட்டினிலே உள்ள
என்தமிழ் மக்கள் துயின்றிருந்தார்!
அன்னதோர் காட்சி இரக்கமுண் டாக்கி,என்

ஆவியில் வந்து கலந்ததுவே!”

இன்பத்தில் தூங்கிடலாம்! ‘இன்னல்களுக் கிடையில்
என்தமிழ் மக்கள்துயில் கின்றனரே’
என்றான்!
துன்பத்தில் தூங்குபவன் நோயாளி, பேதை!
‘துயின்றிருந்தார் என்தமிழ் மக்க’ளெனும் கூற்றில்
என்புதுமை காட்டுகின்றான்? தெரிந்தீரா? மற்ற
இனமக்கள் எல்லாரும் விழித்திருக்கின் றாராம்!
‘என்மக்கள் மட்டும்துயில் கின்றார்’என் கின்றான்!
இதனாலே கழிவிரக்கம் கொள்கின்றான் நம்மேல்!

நம்மினத்தை அன்னவன்போல் விழிக்கவைக்கும் முயற்சி
நாளைவரை எப்புலவன் தமிழகத்தில் செய்தான்!
வெம்மனத்தைக் கொண்டுள்ளோம்! வீண்வாழ்க்கை வாழ்வோம்!
விடியாத மூஞ்சிகளாய்த் தூங்குகின்றோம் இன்னும்!
அம்மணமாய் நம்முன்னர் அலைந்தவர்கள் எல்லாம்
அழகழகாய் உடையுடுத்தே உலகஉலாப் போந்தார்!
கும்மிருளில் குருட்டாட்டம் போடுகின்றாேம்! ஐயோ!
‘கும்பிக்குச் சோறு’என்றால் தாயினைவிற் கின்றோம்!

3. சீர்திருத்தம்

அடுத்தபடி பாவேந்தன் சீர்திருத்தம் சொல்வான்!
அத்தனையும் நாம் கேட்டோம்; கேட்டுநடந் தோமா?
உடுத்தபடி உண்டபடி உறங்கியுறங் கியராய்
உயிர்த்துயிர்த்துச் சாகின்றோம்! உருப்படியாய் வாழோம்!
மடுத்திடுவீர் பெண்கள்நலம் பேசுகின்றான்; நாமும்
மாரடித்துப் படிக்கின்றோம்; நொண்டி நொண்டி நடப்போம்!
கொடுத்தாலும் வாங்குகிலோம்; கொண்டாலும் காக்கோம்!
குலம்பிழைக்கப் பெண்களைநாம் வாழவைப்போம், கேட்பீர்!

‘இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின்
இலேசுவழி ஒன்றுண்டு; பெண்களைஆ டவர்கள்
எவ்வகையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேண்டும்!
தாய்மையினை இழித்துரைக்கும் நூலும்ஒரு நூலா?
செவ்வையுற மகளிர்க்குக் கல்விநலம் தேடல்

செயற்பால தாயினுமே முதன்மைஎனக் கொண்டே
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/141&oldid=1448526" இலிருந்து மீள்விக்கப்பட்டது