பக்கம்:கனிச்சாறு 8.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


அவ்வகையே செயல்வேண்டும்! அறிவுமனை யாளால்
அமைதியுல குண்டாகும்!' - பாவேந்தன் சொல்வான்!

‘பெண்டாட்டி என்று பெயரடைந்த நாள்முதலே
ஒண்டொடிக்கும் சொத்தில் ஒருபாதி உண்டுரிமை!
தன்மனைவி செத்தால்தான் வேறுமணம் தான் செயலாம்!
இன்னல் மனைவிக் கிழைத்தால் கொலைக்குற்றம்’

‘ஆணுயர் வென்பதும் பெண்ணுயர் வென்பதும்

நீணிலத் தெங்கணும் இல்லை’


தீண்டாமை பற்றியெல்லாம் மிகத்தெளிவாய்ச் சொன்னான்!
திராவிடர்தம் இனத்தலைவர் நம்பெரியார் சொன்ன
வேண்டாமைப் பட்டியல்கள் அனைத்தையும் பாட்டாய்
ஆரியர்கள் வெலவெலக்க ஆக்கியவன் தந்தான்!
தீண்டாதார் எனுமவரும் பிறரும்ஓர் தாயின்
திருவயிற்றில் வந்தவரன் றோ?’
என்றே கேட்டான்!
ஈண்டெல்லாம் பெருச்சாளி கோயில்நுழை கையிலே
இவர்க்குமட்டும் கோயில்விலக் கேனென்றார்ப் பரித்தான்!

“நித்தமும் சாக்கடை நீந்தும் பெருச்சாளி
நேரில் அக் கோயிலிலே - கண்டும்
ஒத்தபிறப்பின ரைமறுத் தீர்உங்கள்
கோயிலின் வாயிலிலே!’

‘ஏகபரம் பொருள் என்பதை நோக்க - எல்
லாரும் உடன் பிறப்பே! - ஒரு
பாகத்தார் தீண்டப் படாதவர் என்பதி
லே,உள்ள தோ சிறப்பே!’

‘இந்த உலகில் எண்ணிலா மதங்கள்
கந்தக வீட்டில் கனலின் கொள்ளிகள்

சாதிக்குச் சாவுமணி அடிக்க’


சாதியொழிப் பதும்தமிழை வளர்ப்பதுமே நம்மோர்
செயவேண்டும் சீர்த்திருத்தம் எனத்தெளிவாய்ச் சொன்னான்.

‘சாதி ஒழித்திடல் ஒன்று - நல்ல
தமிழ் வளர்த்தல்மற் றொன்று!
பாதியை நாடு மறந்தால் - மற்ற

பாதி துலங்குவ தில்லை.’
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/142&oldid=1448527" இலிருந்து மீள்விக்கப்பட்டது