பக்கம்:கனிச்சாறு 8.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  163


13. பாவேந்தர் உள்ளம்!

(புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் பாவேந்தர் தமிழ் இயக்கத்தின் சார்பில் 1.6.87 அன்று நடைபெற்ற பாவேந்தர் விழா பாட்டரங்கில் தலைமையேற்றுப் பாடியது.)

முன்னுரை!

பேரன்பு மிக்க பெரியோரே! தாய்மாரே!
போராசிரியப் பெருமக்காள்! நல்லிளைஞீர்!
பாட்டரங்கம் ஏறவந்த பாப்புலவீர்! பாவேந்தை
நாட்டரங்கம் தன்னில் நலஞ்சுவைக்க வந்த, தமிழ்
அன்புடையீர்! இனநலம் ஆர்க்கின்ற நல்லவையீர்!
என்பு நெகிழ்ந்துருக யாவரையும் வணங்குகின்றேன்!

புரட்சிக்குப் பாவேந்தன்! பொங்குதமிழ்ப் பேரினத்தின்
மருட்சி நீக்கவந்த மாமருந்து! ஆரியத்தைப்
பாட்டால் அடித்துப் பதைபதைக்க வைத்ததமிழ்க்
கோட்டுக் களிறு! கொட்டிவைத்த பாக்குவியல்!
கூனாத நெஞ்சன்! குறைவுபடாக் கொள்கைமலை!
ஆனான பாட்டனெல்லாம் அவனடிக்குத் தாளாமல்
நெஞ்சை நசுக்கிக்கொண்ட நேர்ச்சியினை நாம் கண்டோம்!
பஞ்சைப்பா வலனல்லன்; பாய்ந்தெழுந்த தேனருவி!
அஞ்சாமல் யார்க்கும் அரிமாப்போல் முழங்கியவன்!
துஞ்சாமல் தோளுயர்த்தித் தமிழினத்தைத் தூக்க வந்தோன்!

ஈங்கதனால் தானே இவனுக்கு விழாவெடுத்தார்!
தூங்குகின்ற நந்தமிழர் உணர்வுக்குத் தீவைத்தார்!
புரட்சிப்பா வேந்தனுக்குப் போற்றுவிழா அமைந்ததனால்
மருட்சி யடைந்திருப்பார் நம்பகைவர் மனம்வைத்தே!

பாவேந்தைப் பாடினால் பணம்வந்து சேராது!
ஆவல் அடங்கும்! அடிவயிறு தான்குளிரும்!
மேனியெலாம் நன்றியெனும் நல்லுணர்வால் மேல்சிலிர்க்கும்!
தேனில் விழுந்ததுபோல் நாவெல்லாம் தித்திக்கும்!
உள்ளம் கிளர்ச்சியுறும்! உயிரும் உவகைபெறும்!
குள்ள நினைவழியும்! கோபுரமாய் வாழ்வுயரும்!
அவனுரைத்த சூள்தன்னை அவன்வாயால் கேளுங்கள்!
எவனுரைத்தான் இவ்வாறாய், எந்தமிழ்ப்பா வேந்தனல்லால்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/177&oldid=1448602" இலிருந்து மீள்விக்கப்பட்டது