பக்கம்:கனிச்சாறு 8.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  175


அப்படித்தான் ‘கனகசுப்பு ரத்தினம்’ ‘பா வேந்தன்’
இன்னவரைப் போல்இயற்கை இயற்றிவைத்த பேருள்
இவர் அவரின் ஆசானுக் காசான்என் றுரைப்போம்!
முன்னவரைப் - பாரதியைக் - குறைசொல்ல வில்லை!
மூச்சில்இவர் தமிழுயிர்த்தால் பேச்சில்அவர் என்போம்!
என்னபடி பார்த்தாலும் பாரதிபாட் டுக்கே
ஏழுபடி மேலிருக்கும் பாவேந்தன் பாட்டு!

நடுநிலையில் லாமலிதை நாம்சொல் வில்லை!
நாமவரின் வழிவந்த நன்றியுரை இல்லை!
கெடுநிலையில் பார்ப்பனர்கள் பாவேந்தர் பாட்டைக்
கீழ்வைத்துப் பேசுகின்றார்; நாமவர்க்குச் சொல்வோம்!
தொடுநிலையில் - பாட்டுணர்வில் - தோய்கின்ற நிலையில்.
தூய்தமிழை மனங்கொண்டு பாடுகின்ற நிலையில்,
நெடுநிலையில் - மலைப்புனலாய்ப் பொழிந்திருக்கும் நிலையில் -
நிலைத்திருக்கும் நிலையினிலே - பாவேந்தன் வெல்வான்!

தன் விளக்கம் பாடுகின்றான் பாவேந்தன் இங்கே!
தமிழ்ப்புலவன் செம்மாப்பைக் கேளுங்களிப் பாட்டால்!!

‘சீர்த்தியால் அறத்தால் செழுமையால் வையப்

போர்த்திறத்தால் இயற்கை புனைந்தஓர் உயிர், நான்!’


இன்விளக்கம் இதுவாகும்! ‘இயற்கைதந்த உயிர்நான்’
என்றுரைக்க வில்லையவன்; ‘புனைந்தஉயிர்’ என்றான்!
என்விளக்கம்! உணர்ந்தீரா? இருக்கும்உயிர் யாவும்
இயற்கைத்தாய் செய்தெடுத்து வீசிவிட்ட உயிராம்!
என்வியப்பு! பாவேந்தன் உயிரைமட்டும் நன்றாய்
எழில்சீர்த்தி அறம்செழுமை வீரத்தொடு புனைந்தாள்!

பாவேந்தன் சொல்கின்றான்! யாரிவன்போல் சொன்னார்?
பாருங்கள் மேன்மேலும் அவன்கையின் வண்ணம்!
நாவேந்திப் பிறர்சொன்னால் உணர்வேந்திச் சொல்வான்!
நல்லதமிழ் பிறர்சொன்னால் உயிர்த்தமிழைச் சொல்வான்!
காவேந்திக் கொண்டிருக்கும் பூவேந்தித் தேனைக்
களிமதர்ப்பக் குடித்திசைக்கும் தேனீப்போல் தமிழின்
ஈவேந்தித் தருகின்றான் செந்தமிழாய்! பாவாய்!
இயற்கையினை இவனைப்போல் படம்பிடித்த தெவரே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/189&oldid=1448647" இலிருந்து மீள்விக்கப்பட்டது