பக்கம்:கனிச்சாறு 8.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 5


பூசிக் கழுவிப் புனுகு குழைத்திட்டுப்
பாசி உடலுக்குப் பட்டுடைகள் தாமணிந்து
செல்வச் செருக்காலே சீர்த்தநடை போடுகின்ற
புன்மைக் கயவோர்கள் போக்கில் அடிநசுங்கும்
கோடான கோடி ஏழைக் குறுமக்கள்
பாடாகப் பட்டும் பசியடங்க உண்ணாமல்
வெள்ளெலும்புக் கூடாக வீதிப் புறங்களிலே
தள்ளப் படுகின்ற தாழ்ச்சிநிலை சாகாதோ?
புண்ணுக்கே அப்பும் பொடிமா முகத்தப்பிக்
கண்ணுக்கு மையிட்டுக் கார்குழலைக் கொண்டையிட்டுப்
பெண்ணுக்கு வாய்த்த பெருமையெலாம் கால்மிதித்துக்
கண்ணாடிச் சேலையினைக் கால்தெரியக் கைதெரியப்
பின்முதுகு காணப் பிறைவயிறு தோன்றிடவே
முன்னுடுத்துப் போகின்ற முச்சந்தி நாகரிகம்
செந்தமிழ்ப் பண்பாட்டின் சீர்மையினைச் சீய்க்காமல்
வந்தவழிப் போகுமொரு வாய்ப்பையிங்குக் காண்பேனோ?

முத்துத் தமிழால் உலகம் முழுதளந்தே
எத்திசையும் பேர்மணக்க எந்தமிழர் வாழாரோ?
பூக்காரோ? வாழ்க்கை புதுக்காரோ? நூல்பலவும்
ஆக்காரோ? செந்தமிழால் ஆகாத தில்லையெனக்
காட்டாரோ? வேற்றுலகம் காணாரோ? எந்தமிழின்
பாட்டாலே இவ்வுலகப் பான்மை உயர்த்தாரோ?
ஊர்ஊராய்ச் சென்று, தெருத்தெருவாய்க் கால்நடந்து
வார்கடலைத் தாண்டி வளர்மலைகள் ஏறிப்போய்
வேற்றுநில மாந்தர் விழிப்புறவே நந்தமிழின்
ஊற்றுப் பெருக்கை உயிராம் கலைப்படைப்பைக்

காட்டி மயர்வறுத்துக் காட்சிநிலை சேர்ப்பாரோ?
ஏட்டில் எழுத்தில் இடைநடக்கும் சொற்பெருக்கில்
எந்தமிழின் ஏற்றம் எடுத்தே முழக்கமிடச்
செந்தமிழின் மாணாக்கர் சேர்ந்தொருங்கே செல்லாரோ?
‘என்றே பலவாறாய் எண்ணி வருந்துகையில்,
“இன்றே புறப்பட்டோம்! ஏற்றமினி நாட்டுவம்காண்;
வீணாக்கோம் ஓர்நொடியும்” என்றே விரைந்தெழுந்து
மாணாக்கர் கூட்டம் மடிதட்டி நின்றதுகாண்’
என்னவடா சொல்வேன்? எடுத்தெங்ஙன் பாவிரிப்பேன்?
முன்னர் தமிழ்க்குடி செய் மூண்ட தவப்பயனோ?
வள்ளுவர்தம் வாய்மை வளங்கொண்டு விட்டதுவோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/19&oldid=1447558" இலிருந்து மீள்விக்கப்பட்டது