பக்கம்:கனிச்சாறு 8.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6 ☐ கனிச்சாறு - எட்டாம் தொகுதி


உள்ளுவர்தம் நெஞ்சமெல்லாம் ஊற்றாய்ப் பெருகிற்றோ?
நக்கீரன் சொல்துணிவும் நற்கபிலன் பாத்திறனும்
ஒக்க இணைந்தவர்தம் உள்ளத்துப் பொங்கினவோ?
பாண்டியர்தம் பூட்கை பனிமலைக்கண் நின்றிருந்து
மீண்டுமிவர் உள்ளத்தே மின்னலிட்டுப் பாய்ந்ததுவோ?
சோழர் குடிப்பெருமை சோர்ந்தயிவர் நெஞ்சத்தே
வேழப் பெருமுழக்காய் வீறுபெறக் கீண்டதுவோ?
குன்றத்துச் சேரன் குலையாத வில்மறவன்
மன்றத்தே வந்து மறவிதையை நட்டானோ?
யாங்ஙன் பொருள்விரிப்பேன்? யாப்பில் கருத்தெடுப்பேன்?
தூங்காத எந்தமிழர் தோளுயர்த்தி நின்றுவிட்டால்,
ஆழிமுழக் கென்னாகும்? ஆன்றமலை தூளாகும்!
‘வாழிதமிழ்’ என்றொலித்தால் வாரிடியும் மேற்பொடியும்!
மின்னல் முறிந்தொசியும்! விண்கோள்கள் அற்றுதிரும்!
துன்னும் ஐம் பூதங்கள் தோற்றே அடிவணங்கும்!
வெங்கதிரும் நுண்பொடியாய் விண்டுதிர்ந்து வான்சிதறும்!
பொங்குணர்வு விண்ணெல்லாம் போர்த்துப் புடைநிரம்பும்!
ஊழி பெருக்கெடுக்கும்! ஓங்காரம் சங்கார்க்கும்!
நாழி தவறுமோ? என்றே நனிமகிழ்ந்து
திந்தோம்திந் தோமெனவே திக்கெட்டும் கால்தாவத்
துந்துபி பாடத் துடிமுழக்கம் ஆர்த்தெழவே
உள்ளம், உயிர், அணுக்கள் எல்லாமும் ஒக்கநின்று
வெள்ளப் பெருக்கேபோல் வீங்கும் பெரும்புயல்போல்
கற்பனை நெஞ்சம் கரைமீறி ஆர்த்ததுகாண்!
சொற்புனைவால் வல்லுணர்வு சூர்த்தல் விளக்குவதோ?
ஆர்த்தெழுந்த மாணவரை ஆரத் தழுவி, எனை
ஈர்த்த குளிர்தமிழால் இஃதுரைப்பேன்; கேளீர்;
“தமிழியக்கம் காணத் தலைப்பட்டீர்! வாழ்வீர்!
சிமிழ்த்தெழுந்த தொல்மறவக் கூட்டமே, சீர்த்துவரும்
வேங்கைக் குருளைகளே! வல்லரிமாக் குட்டிகளே!
ஈங்கெழுந்த பேரெழுச்சி இந்நாள் பெருமுயற்சி!
வீங்கிநின்ற குன்றத்தோள் வீழாமுன் உள்ளத்தே
தேங்கிநின்ற வல்லுணர்வு தேய்ந்து குறையாமுன்,
செந்தமிழை மேல்நிறுத்தி, சீர்த்த பகையழித்தே
எந்தமிழ்ப் பண்பாட்டை, நாட்டை இடைமீட்க
வேண்டி வழுத்துகின்றேன்! வெற்றிவந்து வாய்த்திடுக!
ஈண்டெழுந்து நிற்போம் இணைந்து!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/20&oldid=1447559" இலிருந்து மீள்விக்கப்பட்டது