பக்கம்:கனிச்சாறு 8.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 கனிச்சாறு - எட்டாம் தொகுதி


3. பாவேந்தர் பாரதிதாசன் விழாவில் பாப்பொழிவு!

(நீலமலை, பெகும்பகல்லா திருவள்ளுவர் மன்றச் சார்பில், தி.பி. 2000,
விடை கஉ (14-6-69)இல் நடைபெற்ற பாவேந்தர் பாரதிதாசன் விழாவில்
தலைமை தாங்கி, விழாமன்றத்தினர் விரும்பிக் கேட்டுக்
கொண்டதற்கிணங்க ஆற்றிய பாப்பொழிவு இது.)


பேரன்பு மிக்க பெரியோரே! தாய்மாரே!
ஈரத் தமிழால் எனைவர வேற்ற
பெகும்ப கல்லா வள்ளுவர் மன்றத்துத்
தகுதமிழ் அன்பரீர்! தமிழ்நலம் சான்ற
பேரா சிரியரீர்! புலவரீர்! வணக்கம்.

பாரதி தாசன் நினைவு விழாவிது!
இவ்விழா விற்கெனைத் தலைமை ஏற்றிட
ஒவ்வி அழைத்த உழுவலன் புடையோர்
அனைவர்க் கும்என் அகம்நிறை நன்றி!
இனைய நல்விழா எந்தமிழ் நாட்டில்
ஊர்தொறும் நடைபெறும் காலம் எதுவோ?
பார்தொழும் பாரதி தாசனார் பாநலம்
சிறுவர் வாயிலும் பயிலும்நாள் எதுவோ?
அதுவே தமிழர் விழிப்புற்ற காலமாம்.
அதுவே தமிழ்த்தாய் அரசுசெய் நாளாம்.

பாரதி தாசனைப் பலரறிந் திருக்கலாம்.
பாரதி தாசனார் பாடலின் திறத்தைச்
சிலரறிந் திருக்கலாம்; சிலர்க்கவர் யாரெனத்
தெரியா திருக்கலாம்! உண்மை என்னெனில்,
பாரதி தாசனார் பைந்தமிழ்ப் பாக்களை
ஊரறி யும்படி விட்டுவிட் டோமெனில்,
மூவா யிரமாண்டு முக்காடு போட்டுச்
சாவா மலும், இரு கண்விழி யாமலும்
தூங்கிக் கிடக்கும் தமிழனின் தொடையில்
கயிறு திரிப்ப தெப்படி? அதன்பின்
வயிறு கழுவுவ தெப்படி நாமெலாம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/28&oldid=1447632" இலிருந்து மீள்விக்கப்பட்டது