பக்கம்:கனிச்சாறு 8.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 29


பாவேந்தர் போர்ப்பாட்டுப் பாடியது போதாதா?
மூவேந்தர் கூட்டிவைத்த முக்கழகம் போதாதா?
எல்லாம் இருந்தும்நாம் இன்னுமெழ வில்லையெனில்
நல்ல அடிமைநலம் நாம்சுவைத்து வந்தகுறை!
இன்றுமுதல் நாம்செய்யும் எந்தவினைப் பாட்டுக்கும்
ஒன்று, பயன் வேண்டும்; இன்றேல் ஊமைத் தனம் வேண்டும்!
“பாட்டரங்கம் கேட்டவொரு கோழை புடைத்தெழுந்தான்;
நீட்டுவாள் தூக்கியவன் நெற்றிக்கு முன்னிறுத்தி
ஏடா தமிழ்ப்பகையே! என்னநீ சொல்கின்றாய்!
கூடா? உயிரா? எதுவேண்டும் கூறென்றான்”.
என்றோர் கதைநிகழ்ந்தால் இத்தகைய பாட்டரங்கால்
முன்னோர் விளைக்கா முழுப்பயனும் வாய்த்த தென்பேன்!
அவ்வுணர்வை ஊட்டாத பாட்டாலே ஆவதென்ன?
இவ்வரங்கும் அந்த எழுச்சியிலோர் எள்முனையே!

இக்கால் இலக்கியமும் சொற்பொழிவும் எங்ஙனென்றால்
முக்காலும் பொய்ப்படியில் மூழ்கிக் கவிழ்த்தளந்து
மெய்யாய் அளந்தமென மெய்யடித்துச் சொல்லுவதாம்!
உய்யாது நின்றென்ன? உய்ந்தென்ன? போயென்ன?
நம்பிழைப்பு நன்றாய் நடந்துவரும் என்றாலோ
கும்பிக்குக் கேடில்லை என்றறிந்து கொண்டாலோ
எப்படியும் பாடலாம்! எப்படியும் பேசலாம்!
எப்படியும் தாளில் எழுத்தெழுத்தாய்த் தீட்டலாம்!
அப்படியே நாமுமதை ஆமாமாம் என்றுசொல்லி
ஒப்படிக்கு மேல்படியில் ஒன்றிரண்டு மேலேறி
நின்றால் பிழைக்கலாம்; நிற்கவில்லை என்றாலோ
என்றுமே ஏற்றம் இருக்காதே! இன்றெல்லாம்
மானத்தை விட்டால் மறுநொடியில் நற்பதவி!
ஏனம் நிறைய, இடுகின்ற வாய்நிறைய
வெண்சோறு! வெள்ளைஉடை! வேளைக்குப் பால்பழங்கள்!
மண்தரையில் கால்படுமா? போக மகிழுந்து!
வேறென்ன வேண்டும்? தமிழால் எதுவேகும்?
சேறு குழம்பிடுமா? செந்நெல் விளைந்திடுமா?
ஆகவே தமிழ்வளர்ச்சி என்பதெல்லாம் ஆர்ப்பரிப்பே!
ஈகம் பொதுத்தொண்டிங் கென்பவெல்லாம் ஏய்ப்பதுவே!
இன்றைக் கிருக்கும் நிலையிதுவே! இந்நிலையிற்
குன்றைத் தகர்க்கக் குறிவைத்துப் பாடுகின்றோம்!
பொய்புளுகு மூட்டைகளைப் பொத்தலிட்டுப் பார்க்கின்றோம்!
செய்பயனை நம்பியுள்ளோம்! செல்வத்தை எண்ணவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/43&oldid=1447657" இலிருந்து மீள்விக்கப்பட்டது