பக்கம்:கனிச்சாறு 8.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 31


ஏறி இருக்கின்றார் பாட்டரங்கம்! இன்னோர்
உரைக்கும் தமிழ்ப்பாட்டில் உண்மை இருக்கும்!
கரையற்ற நீர்க்குக் கரைபோல யாப்பிருக்கும்!
இன்பத் தமிழிருக்கும்! ஏற்றம் குறைந்தார்க்குத்
தென்பிருக்கும்! சொல்லில் தெளிவிருக்கும்! நீங்களெல்லாம்
கேட்கின்ற பாட்டரங்கில் கேளாச் சுவையிருக்கும்!
வேட்கின்ற செந்தமிழும் வீறிவரும் நல்லுணர்வும்
சொல்லுக்குச் சொல்லிருக்கும்! சொல்லில் பொருளிருக்கும்!
பல்லுடைக்கும் எங்கள் தனித்தமிழ்தான் என்பார்க்கே
ஏற்ற மருந்திருக்கும்! எம்வழியில் அன்னவரை
மாற்ற வகையிருக்கும்! மற்றவர்க்கும் வாய்ப்பிருக்கும்!
மற்றே இனியிருக்க வேண்டுவதென் னென்றாலோ
சற்றேனும் நீங்கள் அமைந்துசெவி சாய்ப்பதுவே!

பாவலர்கள் பாடி முடித்தவுடன் பாட்டரங்கில்
ஆவலுடன் நீங்கள் அமைதியுடன் வீற்றிருந்தால்,
பின்னுரையில் செந்தமிழர் பீடுறவே இன்றுவரை
மன்னுந் தமிழ்மொழியின் மாண்புரைக்க எண்ணுகின்றேன்.
அன்பர்கள் எல்லாம் அமர்ந்திருக்க வேண்டுகின்றேன்.
இப்பொழுது செந்தமிழின் எண்மைச் சிறப்புரைக்க
ஒப்பும் புலவோரை ஒவ்வொருவ ராய் அழைப்பேன்.
முப்பாலும் ஆய்ந்த முதுபுலவோர் வீற்றிருக்கத்
தப்பாமல் வாழுந் தமிழ்!

பின்னுரை:

பாவலர்கள் எல்லாரும் பைந்தமிழைப் பாய்ச்சி விட்டார்;
நாவளங்கள் காட்டிவிட்டார்; நல்லுணர்வைத் தூண்டி விட்டார்!
செந்தமிழின் எண்மைச் சிறப்பினையும் பாடலுற்றார்
எந்தமிழ்க்கே மேலுஞ்சீர் ஏற்றிவிட்டார்; உங்களொடு
யானுஞ் செவிமாந்தி இன்பத்தில் ஆழ்ந்திருந்தேன்!
தேனருவி பாய்ந்ததுபோல், தீங்குழல்யாழ் நல்லிசை போல்
பாட்டருவி ஆடினோம்! ஆதலினால் பைந்தமிழீர்
நாட்டும் முடிவுரையும் நாகம்போல் காதுபுகும்!
ஆனாலும் சிற்சிலசொல்! ஆங்கொருவர் ஈங்கொருவர்
போனாலும் போகட்டும்! போக்கற்றார் கேட்கட்டும்!
முன்னுரையைக் கேட்டு முடிவுரையைக் கேளாதார்
என்ன பயனும் இலராகச் சென்றிருப்பார்!
செந்தமிழின் எண்மைச் சிறப்புரைத்த பாவலர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/45&oldid=1447659" இலிருந்து மீள்விக்கப்பட்டது