பாவலரேறு பெருஞ்சித்திரனார் ☐ 39
தோல், வல் விலங்கு, நாகம், கும்பி
நால்வாய், பூட்கை, குஞ்சரம், அத்தி
வேழம், கரி, உவா, கைம்மா, சிந்துரம்
களிறு, இபம், வயமா, கைமுகம், புகர்முகம்
தந்தி, மதாவளம், கயம், பகடு, ஒருத்தல்
வழுவை, ஆம்பல், மந்தமா, மருண்மா
மாதிரம், போதகம், என்பன யானையின்
புதுப்பெயர் அல்ல! பழந்தமிழ்ப் பெயர்கள்!
ஒவ்வொரு பெயரும் யானையின் பண்புகள்!
எவ்வொரு மொழியில் இருந்ததிவ் வாறு?
அவ்வள வானே அமர்ந்திலர் தமிழர்.
தால வட்டம் - என்பது யானைவால்!
வேசகம் என்பது - யானை வால்நுனி!
யானையின் முதுகை மஞ்சு என மொழிவர்.
யானை மத்தகம் - கும்பம், மதகம்!
யானை மதம்பாய் கவடு - கரடம்!
யானைக் கைந்நுதி - புழைக்கை யாகும்!
கடம், கடாம், தானம் என்ப ததன்மதம்!
கோடும், எயிறும் - யானைக் கொம்புகள்
நிரியாணம் - என்பது யானையின் கடைக்கண்
யானைச் செவியடி - சூளிகை ஆகும்.
கவுள் - கதுப்பு; உமிழ்நீர் - விலாழி.
யானைப் பல்லடி - கரீரம் ஆகும்.
துதிக்கை - தொண்டை, தொண்டலம், சுண்டை!
வடவை, அத்தினி, கரிணி, பிடி - பெண்ணே!
கயந்தலை, போதகம், துடியடி, களபம்
கயமுனி என்பன யானைக் கன்றுகள்!
கடகம் என்பது யானைக் கூட்டம்.
யானைப் படுகுழி பயம்பு - எனப் பகர்வர்.
பாகலம் என்பது யானைக்கு வருநோய்!
அம்மவோ! எத்தனை அருந்தமிழ்ச் சொற்கள்
எம்மருந் தமிழில் எத்துணை வளமை!
சொல்லிலை என்பான் சோம்பேறி யல்லனோ!
பல்லெலாம் எண்ணுக யானையின் பெயர்க்கே!
எந்த மொழியில் இத்தனைச் சொற்கள்?
அந்த மொழியைத் ‘தென்மொழிக்’ கனுப்புக!
யாவரும் கற்றிட யானே வேண்டுவேன்!
ஆவலால் முந்தி அதனைக் கற்கலாம்!
முத்தமிழ் மொழிவளம் மூங்கிலும் உரைக்கும்!