பக்கம்:கனிச்சாறு 8.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  59


‘கட்டிவெல்லத்தைக் கசக்கு தென்றாள் - அவன்
கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள்!
தொட்டியின் நீரில் குளிக்கச் சென்றான்! - அவன்
தோளை அவள்ஓடித் தேய்த்து நின்றாள்!”

‘கொட் டிய நீரில் குளிர்ச்சி உண்டோ இந்தக்
கோடை படுத்திடும் நாளில்’ என்றாள்!
‘தொட்டியின் தண்ணீர் கொதிக்கு’ தென்றான் -நீ

தொட்ட இடத்தில் சிலிர்க்கு’ தென்றான்.


இசைத்தேனில் காதலைப் பிசைந்த பாக்கள்!
பேச்சுப் போலவே பாநடை யிருக்கும்!
மூச்சுப் பிடித்துப் பாடிட வேண்டா!
இதோ பாருங்கள் பாநடை எழிலை!

“கிழக்கு வெளுக்கக் கிளிமொழியாள் தங்கம்
வழக்கப் படிவீட்டு வாயிற் படிதுலக்கிக்
கோல மிட்ட பின்பு குடித்தனத்துக் கானபல
வேலை தொடங்கி விரைவாய் முடிக்கையிலே
ஏழுமணிக் காலை எழுந்தாள் அவள்மாமி!
‘வாழுகின்ற பெண்ணாநீ வாடி’ என்றாள் தங்கத்தை!
‘இந்நேரம் தூங்கி இருந்தாயா? என்பிள்ளை
எந்நேரம் காத்திருப்பான் இட்டளிக்கும் ‘காப்பிக்கும்’?
என்றே அதட்டி இழுத்துத் தலைமயிரை

நின்ற பொற்பாவை நிலத்தில் விழச்செய்தாள்”


எப்படிப் பாநடை? யாப்பெலாம் இவர்க்கு
ஒப்பஅடி போட்டே உடன்வர வில்லையா?
புலவர்க்குத்தான் தமிழ் என்ற போக்கினை
இலையென் றாக்கிய ஈடிலாப் பாவலர்!

இப்படிப் பாத்திறன்! அடுத்தது இயற்கை,
ஈடு பாட்டினை இயம்பவே வேண்டா!
பாடு பட்டே இயற்கையைப் பாடும்
கேடுகெட்ட கீழ்மைப் புலவர்கள்
போல்இல்லை இந்தப் புரட்சிப் புலவன்!
ஓலைச் சுவடிக் காலத்தும் இவன்போல்
இயற்கையைப் பாடுவோர் அரியராய் இருந்தனர்!

எடுத்துக் காட்டாய் இரண்டொரு பாடல்கள்
மடுத்துக் கேட்போம்! மாண்பது விளங்கும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/73&oldid=1448035" இலிருந்து மீள்விக்கப்பட்டது