பக்கம்:கனிச்சாறு 8.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  77


7. இக்காலத் தமிழ் மாந்தர்!

(வேலூர், ஊரீசுக் கல்லூரித் திரு.வி.க. தமிழ்மன்றம்
1973 பிப்ரவரி 14 இல் நடத்திய முத்தமிழ்க் கலைவிழாப்
பாட்டரங்கத்தில் தலைமை யேற்றுப் பாடியது.)

முன்னுரை

ஓங்கு புகழ்கொண்ட ஊரீசுக் கல்லூரி
தாங்கு முதல்வரீர்! தண்டமிழ்நாட் டுக்கல்வி
பேணிவரும் பேரா சிரியப் பெருமாண்பீர்!
தூணிகர்த்த வாறாகத் தோளோடும் நெஞ்சோடும்
செந்தமிழ்க்குக் காப்பாய்ச் சிறப்புக்குக் கொள்கலனாய்,
எந்தமிழ் நாட்டின் எதிர்கால நற்குடியாய்,
ஆளும் அமைச்சராய் ஆன்றஅதி காரிகளாய்
நாளும் வளர்ந்து வரும் நல்விளைவின் மாணவரீர்!
எல்லார்க்கும் என்றன் இனிய தமிழ் வணக்கம்!

சொல்லார்க்கும், பாட்டில் சுவையார்க்கும், அச்சுவையைக்
கள்ளாரும் வண்டாய்க் களிப்பாரும் உள்ளமுடன்
வெள்ளமென இங்குவந்து வீற்றிருப்பீர்; போற்றுகின்றேன்!

இக்காலை பாட்டரங்கம் என்றாலே மக்களிடை
தக்க விறுவிறுப்பு! தாவிவரும் சொற்களிலே,
சொல்லின் பொருள்களிலே, சொல்லும் வகையினிலே,
சொல்லுக்குச் சொல்லிடையில் சூழும் நகைச்சுவையில்
உள்ளம் பறிகொடுத்தே, உள்ளுணர்வு தாம் பெருகக்
கள்ளமின்றி, வாழ்க்கைக் கனமின்றிச், சின்னேரம்
இன்பத்தில் தோய்ந்திடவே எண்ணி வருகின்றார்!
துன்பத்தை நீக்கும் துடிப்பிருக்கும் எல்லார்க்கும்!

அந்தத் துடிப்பறிந்தே ஆர்வமொடு பாவலரும்
எந்தச் சொல் போட்டால் எதிரிலுள்ள மக்களெல்லாம்
பல்லெல்லாம் நன்றாய்ப் பளிச்சென்று காட்டி, யுடன்
‘கொல்’லென்று தாம்சிரிப்பார்; கூடிக் கை தட்டிடுவார்.
என்றே பகலிரவாய் எண்ணி யெண்ணி, ஆய்ந்தாய்ந்து
நன்றாகச் சொல்லை நகைச்சுவையில் தோய்த்தடுத்து
வந்திங்குப் பாடும் வழக்கத்தை நானறிவேன்!
இந்தவழக் கத்தை எவரும் எதிர்க்கவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/91&oldid=1448092" இலிருந்து மீள்விக்கப்பட்டது