பக்கம்:கனிச்சாறு 8.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  79


வண்ணங்கள் தோய்ந்த வழவழப்பு வன்சுவர்கள்,
கண்ணாடிச் சாளரங்கள், காற்றுலவும் மாடங்கள்,
மின்னோடுங் கூடம், மினுமினுப்பு மென்தரைகள்,
முன்னே இருக்கைகள், மூசைப்பொன் பூச்சுகள்,
கட்டிலிலே மெத்தை, கதவு பலகணிக்குப்
பட்டாலே தொங்கு திரை, பல்வண்ணப் பேழைகள்,
பற்பலவாய் உள்ளறைகள், பாங்கான காப்பறைகள்,
கற்பதித்த தட்டுகள், காட்சிக் கவின் பொருள்கள்,
உள்ளே குளியலறை, ஒன்றிரண்டு நீந்துகுளம்!
கள்ளின் இளமயக்கம், காற்றோ கதகதப்பு,
முல்லைக் கொடிபோன்ற மின்னிழையார் மூசுகின்ற
மல்லிகைக் காடு, மணக்கின்ற மென்தென்றல்,
சொற்புனைந்து வாழுகின்ற சோர்விலாப் பாவலர்கள்
கற்பனையில் காட்டும் கனவுலகக் காட்சியெல்லாம்
மெய்யாய் விரிந்திருக்கும் மேம்பட்ட கோலங்கள்!
பொய்யன்றே இங்குப் புகன்றிருத்தல் கொஞ்சந்தான்!

அப்படிப் பட்டதோர் அண்ணாந்த வாழ்க்கையிலே
எப்படிப் பட்டோர் இருப்பாரென் றெண்ணுங்கள்!
அன்னவர்கள் வாழ்முறைகள்! அன்றாட உண்டிகள்!
மின்னிழைகள் ஓடுகின்ற மேலுடைகள்! கண்கவரும்
பொன்னிழைகள் என்ன! பொலிவுநிலை என்னென்ன!
இன்னிசைகள்! ஆடல்கள்! என்றும் ஒளி மழைக்குள்
வாழ்ந்திருக்கும் வாழ்க்கையினை வண்ணிக்க நாமறியோம்
சூழ்ந்திருக்கும் வெற்றுநிலைச் சூழலிலே வாழ்கின்றோம்!
இப்படியோர் வாழ்க்கை!
                                          இதைவிட்டு நாம்நகர்ந்தால்,
முப்படியாய்த் தம்முடலை முப்பொழுதும் வாட்டுகின்ற
அன்புத் தொழிலாளர் அன்றாட வாழ்க்கையினைத்
துன்பமுறக் காண்போம்! துயரத்திற் கென்னகுறை?
என்பை முறுக்கி, எழிலுடலைத் தாம்உருக்கி,
மன்பதை தன்னலத்தில் முற்றும் மனந்தோய்ந்து,
தம்பெண்டு பிள்ளைத் தனிநலத்தைக் காணாமல்,
கம்புண்டும், மொத்தைக் களியுண்டும், ஆண்டுக் கோர்
நல்லுடையைக் கண்டும், நலமின்றி வாழ்பவர்கள்!
கல்லுடைப்போர், மண்ணெடுப் போர், காட்டுமரமறுப்போர்,
பாதை அமைப்போர், பயிர்த்தொழில்கள் செய்திடுவோர்,
காதை அடைக்கும் கடும் இரைச்சல் போடுகின்ற
ஆலையிலே பஞ்செடுப்போர், நெய்வோர், அழலிரும்புச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/93&oldid=1448097" இலிருந்து மீள்விக்கப்பட்டது