பக்கம்:கனிச்சாறு 8.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80  கனிச்சாறு - எட்டாம் தொகுதி


சாலையிலே தம்முடலைச் சாறாய்ப் பிழிந்திடுவோர்,
ஊர்திகளை ஓட்டிடுவோர், ஓடாக வெய்யிலிலே
சேர்துகளும் தூசிதும்பும் சேர்ந்திடவே கைவண்டி
தள்ளல், இழுத்தல், தலை - முதுகில் தூக்கிவரல்,
அள்ளல், அடைத்தலெனும் ஆன்றபணி அத்தனைக்கும்
பொன்னுடலை ஆட்படுத்தும் புண்பட்ட நெஞ்சாளர்,
என்னபடி யாயுழைத்தும் ஏறாத வாழ்க்கையிலே,
சீறும் கடல்விளைவைச் சென்று கொணர்ந்துவந்தே
ஊறும் குருதிக்கே ஊட்டமென விற்றுவிடும்
மீன்பிடிக்கும் தோழர், மிகப்படிப்பார் கல்விக்குத்
தான்படிக்கா வாழ்க்கையினைத் தந்துதவும் அச்சாளர்,

- என்று பலவாறாய் இவ்வுலகம் வாழ்வதற்கே
அன்றாடம் தாம்சாகும் அருமைத் தொழிலாளர்!
அன்னவர்வாழ் கின்றநிலை! அங்கே எழுகின்ற
சின்ன தெருச்சண்டை! சிற்சிலகால் குத்து வெட்டு!
கம்புகத்தி மோதும்; கணக்கு மருத்துவர்க்கே!
வம்புவழக் காகும்; வழக்குரைஞர் பைநிறையும்!
இப்படியோர் வாழ்க்கை!
                                     இதைவிட்டு நாம்நகர்ந்தால்
எப்படிப்பும் வாய்க்க இருக்கின்ற கல்வியகம்!
அங்கிருக்கும் ஓருலகம்! ஆசிரியர் மாணவர்க்குப்
பங்கிருக்கும் அவ்வுலகில்! பண்பும் மிளிர்ந்திருக்கும்!
என்றாலும் சிற்சிலகால் தொல்லை எழுந்துவிடும்!
நின்றாலும் தப்பாய், அமர்ந்தால் நெடுந்தப்பாய்
நேர்ந்துவிடும்! அக்கால் நிகழ்ந்துவிடும் போராட்டம்!
ஆர்ந்துவிடும் காவலர்க்கோ ஆக்கம் பலவிருக்கும்!
குண்டாந் தடிகள் குலைநடுங்கச் சூழ்ந்தாடும்!
மண்டைக்குள் மாணவர்கள் வைத்திருப்ப தென்னென்று
காவலர்கள் சிற்சிலபேர் காண உடைப்பார்கள்!
ஆவலாய் உள்ளிருந்து மூளைவெளி யானவுடன்
‘ஓகோகோ’ வென்றே உரக்கச் சிரிப்பார்கள்!
சாகாக் கணக்குவரும்! ஆட்சியினர் சான்றுவரும்!
மன்றம் நிறுவார்! மாணவரும் ஒப்பிடுவார்!
ஒன்றிரண்டு மூன்றென்றே ஓடிவிடும் நாட்களெல்லாம்!
எல்லாம் மறந்துவிடும்! என்றேனும் மீண்டொருவர்
கல்லால் அடிப்பார்; கலகம் எழுந்துவிடும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/94&oldid=1448099" இலிருந்து மீள்விக்கப்பட்டது