பக்கம்:கனிச்சாறு 8.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாவலரேறு பெருஞ்சித்திரனார்  85


அன்னவரைத் தாம்கொள்ள ஆயிரம்பத் தாயிரமென்
றெண்ணிவை என்னும் இளைஞருடைப் பெற்றோர்க்கும்
நண்ணும் சிறையென்றால் நாடு திருந்தாதா?
மங்கையர் கூட்டம் மகிழ்ந்திருக்க மாட்டாதா?
இங்கிருக்கும் நல்லிளைஞர் எண்ணிச் செயற்கெழுக!
மற்றுத் தொழிலாளர் மாய்ந்துபோ கின்றநிலை
எற்றுக் கிருந்திடுதல் வேண்டுமிங்கே? எண்ணிடுவீர்!
வெற்றுக்கே கட்சி வெறியாட்டம், கொள்கை - எல்லாம்!
தொற்றுநோய் போலத் தொழிலாளர் போராட்டம்!
தன்னுடலால் மக்கள் தனிநலத்தைக் கூட்டுகின்ற
பொன்னேர் தொழிலாளர் உள்ளம் புகையாமல்
கண்ணெனவே காத்தல் அரசின் கடமையென்க!
உண்ணும் உணவும் உடையும் உறையுளுமென்
றெல்லாம் அவர்க்கிருத்தல் எல்லார்க்கும் நல்லதுவாம்!
கல்லா அவருடலம்? காய்ச்சி வைத்த வல்லிரும்பா?
உண்டது தான்செரியா தோர்கூட்டம் வாழுவதா?
உண்பதற்குக் கூழின்றி ஓர்கூட்டம் வாழுவதா?
பேச்சுப்பேச் சென்று நாம் பேசுகின்றோம்! செய்தோமா?
காச்சுமூச் சென்றே கதறுகின்றோம் கூட்டத்தில்!
வல்ல தொழிலாளர் வாழ்ந்திருந்தால் வாழ்வோம், நாம்!
அல்லதவர் வீழ்ந்தால் அனைவோரும் வீழ்ந்திடுவோம்!

ஏழையரின் தம்நிலையோ ஈண்டுரைக்க வொண்ணாது!
கோழையரைப் போலவும்நாம் கூனிவிடல் ஆகாதே!
இல்லையெனும் கூட்டத்தை இல்லாமல் ஆக்குவதில்
தொல்லையென்ன வந்ததுவாம்? தோது தெரியாதா?
ஏழையெனும் ஒர்கூட்டம் என்றும் இருந்திடவே
மோழை மனத்தினர், நாம் முக்காலும் எண்ணுகின்றோம்!
அல்லாக்கால் ஏனவர்க்கே ஆக்கம் ஒதுக்கவில்லை!
எல்லார்க்கும் எல்லாமும் என்னும் சமவுடைமைச்
சட்டமிட அஞ்சுகின்றோம்! உள்ளம் தயங்குகின்றோம்!
திட்டமிட ஏன்தயக்கம்! செல்வரிடம் ஏன்அச்சம்?
ஆள்கின்ற நாமும் அவர்போல வாழ்வதற்கே
மூள்கின்ற ஆசைவந்து மொய்த்துக் கிடக்கின்றோம்!
செல்வர்போல் வாழச் சிறியமனங் கொண்டுவிட்டோம்!
வெல்வர்போல் பேசி விளையாட்டுக் காட்டுகின்றோம்!
மெய்யாய் வினைபடவே உள்ளம் தயங்குவது
பொய்யன்றே! ஆகப் புரட்டுபல பேசுகின்றோம்!
நாட்டுடைமைச் சட்டமிங்கு நாளைக்கே வந்தாலும்
வாட்டுகின்ற கொல்வறுமை வாட்டம் தவிராதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனிச்சாறு_8.pdf/99&oldid=1448111" இலிருந்து மீள்விக்கப்பட்டது