பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16



மாசற்றதோர் அரசியல் குற்றம் சிறிதும் இல்லாத ஓர் ஆட்சி - இராமனது ஆட்சி.

எனவே அத்தகைய உன்னத லட்சியவாதியாகிய இராமனின் உயரிய ஒழுக்கம் கண்டு சிந்தை பறிகொடுத்தான் கம்பன்.

“திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேன்” என்ற விழுமிய கருத்தில் ஈடுபட்டான்.

தன்னுடைய ஈடுபாட்டை எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள ஆசை கொண்டான்.

எனவே “ஆசை பற்றி அறையலுற்றேன்” என்று தனது உள்ளக்கிடக்கையை வெளியிடுகிறான் கம்பன்.

மேலும் சொல்கிறான்:


வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாதெனில்
பொய்யில் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வமாக் கதை மாட்சி தெரிவிக்கவே

இந்த தெய்வப் பெருங் கதையின் பெருமையை - உயர்வை - எல்லாருக்கும் தெரிவிக்கவே கம்பன் இராம காதையைப் பாடினான்.

இந்த ஆசை கம்பனுக்கு வரக் காரணம் என்ன? காலமும் சூழ்நிலையுமே. காலமும் சூழ்நிலையும் எவ்வாறு இருந்தன?

ஆராய்வோம்.