பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22



ஆக, சங்க காலத்துக்குப் பின் கம்பர் காலம் வரை நிலவிய கால கதியை ஒருவாறு கண்டோம். இந்த ஒன்பது நூற்றாண்டுகளில் சமயப் போராட்டங்கள் மூன்று நிகழ்ந்து உள்ளன. ஒன்று பெளத்த சமணப் போராட்டம்; இன்னொன்று சமண சைவப் போராட்டம்; மற்றொன்று சைவ வைணவப் போராட்டம்.

பெளத்த—சமணப் போராட்டம் ஒரு சிந்தாமணியைத் தந்தது; சமண—சைவப் போராட்டம் ஒரு பெரிய புராணத்தைக் கொடுத்தது. சைவ—வைணவப் போராட்டம் எதைக் கருக்கொண்டது? இராம காதையைக் கருக் கொண்டது. அது கம்பர் மூலம் உருக்கொண்டது. காவியமாக மலர்ந்தது. கம்பராமாயணம் எனும் பெயர் பெற்றது. என்னை? அரசியல் சமூகச் சூழ்நிலையே ஒரு கவியை உருவாக்குகிறது; கவிக்கு உணர்ச்சியூட்டுகிறது. அரசியலிலும் சமூகத்திலும் தோன்றும் கொதிப்பையே கவி எதிரொலி செய்கிறான்.

சிலப்பதிகார காவியத்தை அருளிய இளங்கோ அடிகள் இதனைத் தெளிவாகக் கூறியிருக்கிறார்.


அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதூம்
சூழ்வினைச் சிலம்பு காரணமாகச்
சிலப்பதிகாரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்

— பதிகம் 55—60