பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37



அவர்கள் சாப்பிட்டார்களா? சாப்பிடவில்லையா? அது பற்றி இதுவரை ஒன்றும் சொல்லவில்லையே! அது பற்றி அவரையே கேட்போம்.

சாப்பிட்டார்கள், என்ன சாப்பாடு? சர்க்கரைப் பொங்கல்! எப்படிப்பட்ட சர்க்கரைப் பொங்கல்?

பயத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, முந்திரிப் பருப்பு ஆகிய நான்கு விதமான பருப்பு வகைகளைக் கலந்து சர்க்கரைப் பொங்கல் செய்து அது மூழ்கும்படியாக ‘கமகம’ என்று மணம் வீசுகின்ற பசுவின் நெய்யை நிறைய வார்த்துச் சாப்பிட்டார்கள்.

அது மட்டுமா? இல்லை; இல்லை. மாம்பழம், வாழைப்பழம், பலாப்பழம் ஆகிய முக்கனிகளும் சேர்த்து உண்டார்கள். அதுமட்டுமா? சர்க்கரைப் பொங்கல் மட்டும் உண்டனரா? வேறு சாதம் இல்லையா? இருந்தது என்ன சாதம்? தயிர் சாதம்.

பாலை நன்றாகக் காய்ச்சித் தோய வைத்த தயிர். பாறை போல் உறைந்த தயிர், கட்டித் தயிர். கத்தி கொண்டு அறுத்து எடுக்கலாம்; அந்தத் தயிரை வார்த்துக் கொண்டு இடை இடையே கொஞ்சம் சாதமும் போட்டுப் பிசைந்து கொண்டு உண்டார்கள்.

எங்கே உண்டார்கள்? தங்கள் தங்கள் வீடுகளிலே அமர்ந்து உண்டார்கள். அவர்கள் மட்டுமா உண்டார்கள்? இல்லை, தம் சுற்றத்தாருடனும் விருந்தினருடனும் உண்டார்கள் சந்தோஷமாகச் சாப்பிட்டார்கள். அந்த மகிழ்ச்சி ஆரவாரம் எங்கும் கேட்டது.