பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47



தாம் மேற்கொண்ட செயல் எவ்வளவு பெரிய ஒன்று என்பதை அப்போது தான் கம்பர் உணர்ந்தார். இராமகாதை ஒரு பெரிய கடல். அக்கடல் முன் தாம் ஒரு சிறு பூனை என்று கருதினார்.

பூனைக்குப் பால் மீது ஆசை. குடித்துவிடும். அதனாலே பால் பாத்திரத்தை மூடி வைப்பார்கள் வீட்டுப் பெண்மணிகள்.

சட்டியிலே உள்ள பாலுக்கு மூடி போடலாம். பால் கடலுக்கு மூடி போடுவது எப்படி? முடியாது.

பூனை என்ன செய்கிறது? கடலில் உள்ள பால் முழுவதையும் குடித்துவிட எண்ணிப் புறப்படுகிறது. குடிப்பது எப்படி? நாவினால் நக்கித்தானே குடிக்க இயலும்? அவ்விதம் எவ்வளவு பாலைக் குடித்துவிட முடியும்? கடலில் உள்ள பால் முழுவதும் குடித்துவிட முடியுமா? முடியாது அன்றோ?

இந்தக் காட்சி கண்முன் தோன்றியது கம்பருக்கு. தம்மைப் பூனையாகக் கருதினார்; இராமகாதையைப் பாற்கடலாகக் கருதினார்.

ஓசை பெற்று உயிர்—ஒலித்து எழுந்து ஆரவாரம் செய்கிற; பால் கடல் உற்றுபால் கடலை அடைந்து; ஒரு பூசை–ஒரு பூனை; முற்றவும் நக்குபு–முழுவதும் குடித்துவிட எண்ணி; புக்கு என—புகுந்தது போல; காசு இல்—குற்றமில்லாத; கொற்றத்து இராமன்–வீரப்புகழ் மிக்க இராமன் உடைய; கதை—கதையை, அறையல் உற்றேன்—சொல்லத் தொடங்கினேன்; (எதனால்?) ஆசை பற்றி—ஆசையினால்.