பக்கம்:கம்பன் கவித் திரட்டு 1.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63



அந்த மக்களின் பொழுது போக்கு பற்றிச் சொல்கிறார் கம்பர் பொழுது போக்கு எது? கோழிச் சண்டை தான் அவர்களது பொழுது போக்கு. சண்டை எப்படி!

வீர வாழ்வே விரும்பும் கோழிகள். அவ்வீர வாழ்வுக்கு இழுக்கு நேரின் கணமும் உயிர் வாழாக் கோழிகள். வெகுளியுற்ற மனம். சினத்தால் சிவந்த கண்கள். கண்களை விடச் சிவந்த உச்சிக் கொண்டை.

இத்தகைய கோழிகள் காலில் கட்டப்பட்ட ஆயுதம் கொண்டு போரிடுகின்றன. பகையின்றிச் சீறுவன. வெறுப்பில்லாதன. ஆனால் போரில் விருப்புள்ளன. மதத்தால் விளைந்த களிப்பில் வீரப் போர் புரிவன. இத்தகைய கோழிகளைப் போர் செய்ய விட்டு வேடிக்கை பார்ப்பார்களாம்.

உறுபகை இன்றி—முன்னர் ஏற்பட்ட பகை இல்லாமல்; சீறி—சீற்றம் கொண்டு; கறுப்புறு மனமும்—சினங் கொண்ட மனமும்; கண்ணில் சிவப்புறு—கண்களை விடச் சிவந்த; சூட்டும் காட்டி—உச்சிக் கொண்டையையும் காட்டி; உறுப்புறு படையில் தாக்கி—தன்னை எதிர்க்கும் கோழிகளைத் தன் காலிலே கட்டப்பட்டுள்ள கத்தியினால் தாக்கி; வெறுப்பு இல—போர் செய்வதிலே சிறிதும் வெறுப்பு இல்லாதனவாகி; களிப்பின் வெம்போர் மதுகைய—மனக் களிப்புடன் வெம்போர் செய்யும் வலிமையுடையனவும்; வீர வாழ்க்கை மறுப்பட—தங்கள் வீர வாழ்வுக்கு மாசு வந்தால்; ஆவி பேணா—உயிரைப் பாதுகாக்க விரும்பாத; வாரணம்—கோழிகளை; செலுத்து வாரும்— போரிலே ஈடுபடுத்துகிறவர்களும்.