4
கூனி எக்காட்சி வழங்குகிறாள்? துடிக்கின்ற நெஞ்சினள்; உள்ளத்தை அமுக்கிக் கொண்டிருக்கும் கோபத்தாள்; குழம்புகின்ற மனத்தாள்; கோபத்தால் சிவந்து தீப்பொறி கக்கும் கண்ணினள்; மூன்றுலகுக்கும். துன்பமூட்டும் இயல்பினள்.
தோன்றிய கூனியும்– அவ்வாறு வெளிப் போந்த கூனியும் (அந்நகர் அலங்கரிக்கப்படுதல் கண்டு) துடிக்கும் நெஞ்சினாள்– கோபத்தால் துடிக்கின்ற மனம் உடையாளாய்; ஊன்றிய வெகுளியாள்– நிலைத்த கோபத்தளாய்; உளைக்கும் உள்ளத்தாள்– வேதனைப்படுகின்ற உள்ளம் கொண்டவளாய்; எரி கான்ற நயனத்தாள்– தீ உமிழ்கின்ற கண்கள் உடையவளாய்; கதிக்கும் சொல்லினாள்– தடுமாறும் சொல் உடையாளாய்; மூன்று உலகுக்கும் ஓர் இடுக்கண் மூட்டுவாளாய்– மூன்றுலகுக்கும் ஓர் ஒப்பற்ற துன்பத்தை ஏற்படுத்துபவளாய் தோன்றினாள்.
ஆழ்ந்த பேர் அன்பினாள் அனைய கூறலும்
சூழ்ந்த தீவினை நிகர் கூனிசொல்லுவாள்
‘வீழ்ந்தது நின் நலம்; திருவும் வீந்தது
வாழ்ந்தள் கோசலை மதியினானல்’ என்றாள்.
இவ்வாறு தோன்றிய கூனி என்ன செய்தாள்? கைகேயி இருந்த மாளிகைக்குச் சென்றாள். படுக்கையிலே படுத்திருந்தாள் கைகேயி. அவளது பாதங்களை மெல்ல வருடினாள் கூனி. கண் திறந்தாள் கைகேயி.
‘கிரகணம் பிடிக்கும் வரையில் எவ்வித களங்கமும் இல்லாமல் ஒளி வீசும் சந்திரன் போல் இருக்கிறாய்.’