பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



87


அரக்கர் தம் மாயங்களை நன்கு அறிந்த தேவர்களும் மயங்கும் வண்ணம் துறவி வேஷம் பூண்ட அந்த இராவன சந்தியாசி சீதையிருந்த பன்னசாலை வாயிலை அடைந்தான். “இதனுள் இருப்பவர் யார்” என்று நாக் குழறக் கேட்டான்.

தெரிந்த – அரக்கர் தம் மாயங்களை நன்கு அறிந்த; தேவரும் – தேவர்களும்; மருள் கொள – இவன் இராவணன் என்று அறியாது மயங்கும் வகையில்; மேனியான் – துறவு மேனி கொண்ட அந்த இராவணன்; தோம் அறு சாலையின் வாயில் – குற்றமற்ற அப்பன்னசாலை வாயிலை; துன்னினான் – நண்ணினான்; நா முதல் குழறிட – நாத்தடுமாற; நடுங்கு சொல்லினான் – நடுங்கும் சொற்களை உடையவனாய்; இவ் இருக்கையுள் – இந்த குடிலில்; இருந்துளீர் – இருக்கின்றவர்களே ! யாவீர் – நீங்கள் யார்? என்றான் – என்று கேட்டான்.

தோகையும் “இவ் வழித்
        தோம் இல் சிந்தனைச்
சேகு அறு நோன்பினர்”
        என்னும் சிந்தையாள்
பாகு இயல் கிளவி ஓர்
        பவளக் கொம்பர் போன்று
“ஏகு மின் ஈண்டு” என
        எதிர் வந்து எய்தினாள்.

“இவர் – இந்த வனத்திலே தவம் செய்பவர் போலும்” என்று எண்ணினாள் சீதை. தேன் பாகுபோலும் இனிய மொழிகளால் “இங்கே எழுந்தருள்க” என்று வரவேற்ற வண்ணம் ஒரு பவளக் கொடி போல் அந்தக் கபட சந்நியாசியின் எதிரில் வந்து தோன்றினாள்.