பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128


“எதிர்த்து வரும் கழுகே! நாவை அடக்கு, எங்கே? அந்த மானிடரை எனக்குக் காட்டு. என் வாளினால் உன் மார்பு புண்ணாகிவிடும். இவ்விடம் விட்டு ஓடு,” என்றான் இராவணன்.

உடனே சடாயு இடிபோல் முழங்கித் தன் சிறகுகளால் இராவணனது தேரின் மீது பறந்து வீணைக் கொடியை அறுத்தான்.

இராவணனுடைய இருபது தோள்களின் மீதும் தாவிக் குதித்து மூக்கால் கொத்தினான் சடாயு; தன் நகங்களால் குடைந்து புண்ணாக்கினான். சிறகுகளால் அடித்தான்; முத்து மாலை அணிந்து விளங்கிய கவசத்தை அறுத்து நாசமாக்கினான்.

இராவணனது வில்லைத் தன் மூக்கினாலே பறித்து ஒடித்தான்.

இராவணன் தனது வாளினால் சடாயுவின் சிறகை அறுத்தான். சடாயு மண்மேல் விழுந்தான்; மலை வீழ்ந்தது போல.

அது கண்டு சீதா பிராட்டி அழுது வருந்தினாள்.

ஏங்குவாள் தன்மையும்
       இறகு இழந்தவன்
ஆங்கு ஊறு தன்மையும்
       அரக்கன் நோக்கினான்.
வாங்கினன் தேரிடை
       வைத்த மண்ணோடும்
வீங்கு தோள் மீக்கொடு
       விண்ணின் ஏகினான்.