பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22


பின்னவன் பெற்ற செல்வம்
        அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்?
        இப் பணி தலை மேல் கொண்டேன்
மின் ஒளிர் கானம் இன்றே
        போகின்றேன்; விடையும் கொண்டேன்.

மன்னவன் இட்ட கட்டளையானால் என்ன? தாங்கள் பிறப்பித்த உத்தரவானால் என்ன? எதுவானால் என்ன? தாங்கள் சொன்னால் அதை நான் மறுப்பேனோ? நான் முடிசூடினால் என்ன? என் தம்பி பரதன் முடி சூடினால் என்ன? இரண்டும் ஒன்று தானே. இதோ இப்போதே காடு செல்வேன். விடை பெறும் வரை கூடக் காத்திரேன். விடை பெற்றுக் கொண்டேன்.

மன்னவன் பணி அன்று ஆகில்–அரசனுடைய கட்டளை அன்று ஆயினும்; நும் பணி மறுப்பனோ?– உமது கட்டளைக்குக் கீழ்ப்படிய மறுப்பேனோ?; என் பின்னவன் பெற்ற செல்வம்– என் தம்பியாகிய பரதன் பெற்ற செல்வம்; யான் பெற்றது அன்றோ– நான் அடைந்தது அன்றோ; அப்பால்– பிறகு; இதனினும்– இதனிலும் மேலான உறுதி– நன்மை; என்– யாது?; இப்பணி– எனக்கு இடப்பட்ட இக்கட்டளையை; தலை மேல் கொண்டேன்– தலை மேல் ஏற்றுக் கொண்டேன்; மின் ஒளிர் கானம்– மின்னல் விளங்கும் காட்டிற்கு; இன்றே போகின்றேன்– இன்றே செல்கிறேன்; விடையும் கொண்டேன்.

இராமன் முடி சூடப் போவதில்லை. காடு செல்கிறான் என்பது கேட்டான் இளையவனாகிய இலட்சுமணன். சினம் கொண்டான்.