பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180


தொழுது - சீதையை வணங்கி; வாங்கினான் - அநுமன் அந்தச் சூடாமணியை வாங்கிக் கொண்டு; முற்ற பழுது உறா வகை - அதற்கு எவ்வித பழுதும் வராதபடி; சுற்றிய தூசினின் - தான் உடுத்திருந்த ஆடையில்; பந்தனை செய்தனன் - முடிந்து பத்திரபடுத்தி வைத்துக் கொண்டான்; பல்கால் அழுது - சீதா பிராட்டியைப் பிரிந்து போக வேண்டுமே என்று பல முறையும் அழுது; மும்மை வலம் கொண்டு - மும்முறை பிரதக்ஷிதணம் செய்து; இறைஞ்சினன் - வணங்கினான்; எழுது பாவையும் சித்திரத்தில் எழுதிய பாவை போன்ற சீதா பிராட்டியும்; அன்போடு ஏத்தினள் அன்புடன் அநுமனைப் புகழ்ந்து ஆசீர்வதித்தனள்; ஏகினன்- அநுமனும் அவ்விடம் விட்டுச் சென்றான்; இப்பால் - இதன் பிறகு யாது நடந்தது என்று கூறுவாம்.

***

சூடாமணியைப் பெற்றுக்கொண்டு அப்பால் சென்ற அநுமன் சிறிது நின்றான்; யோசித்தான்.

வந்தாயிற்று. சீதா பிராட்டியைக் கண்டாயிற்று. “சென்றேன்; கண்டேன், வந்தேன்” என்று சொன்னால் அதிலே என்ன பெருமை இருக்கிறது? ஆகவே பெருமை தரும் செயல் ஏதாவது செய்யவேண்டும் என்று கருதினான்.

அசோக வனத்தை அழிக்கத் தொடங்கினான். “அசோகவனத்தை அழித்தால் அரக்கர் சண்டைக்கு வருவர். அவன் அவர்களை அழித்தால் இராவணனே போருக்கு வருவான். அப்போது அவனது தலைகள் பத்தையும் நன்றாக இடித்து நொறுக்கிவிட்டு ஊருக்குப் போனால் அதுவே ஆண்மைக்குரிய செயல் ஆகும்” என்று கருதினான் அநுமன்.

பேர் உருக் கொண்டான் அநுமன். முன் காலத்திலே பூமியைத் தன் பற்களிடையே கொண்ட வராகமூர்த்தியை ஒத்தான். காவல் மிகுந்த அசோக வனம் எனும் அந்த சோலையில் உள்ள மரங்களைத் தன் கால்களால் தாக்கித்துகைத்து அழித்தான்.